நாகை: வாஞ்சூர் துறைமுகத்தில் இருந்து பறக்கும் நிலக்கரி துகள் காற்றில் கலந்துள்ளனவா என மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் இன்று 2வது நாளாக ஆய்வு செய்து வருகின்றனர். நாகை அடுத்த நாகூர் அருகில் வாஞ்சூரில் தனியார் துறைமுகம் உள்ளது. இந்த துறைமுகத்தில அதிக அளவில் நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. இறக்குமதி செய்யப்படும்போது நிலக்கரி துகள் காற்றில் பறந்து நாகூர் மற்றும் பனங்குடி, நரிமணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவி வருகிறது. இதனால் சுவாச கோளாறு ஏற்படுவதுடன் புற்றுநோய் வர வாய்ப்பு உள்ளதாக அப்பகுதி மக்கள் அஞ்சுகின்றனர்.மேலும் கரி கலந்த காற்று வருவதால் இப்பகுதி மக்கள் வீட்டின் கதவு மற்றும் ஜன்னல் கதவுகளை திறப்பதில்லை. வீட்டின் வெளியே துணிகளை காய வைத்தால் நிலக்கரி துகள் துணிமீது பட்டு துணிகள் வீணாகின்றது. வீட்டின் மேல் உள்ள தண்ணீர் தொட்டியை மூடி வைத்தாலும் தண்ணீரில் நிலக்கரி தூள்கள் படிந்து விடுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சமூக ஆர்வலர் சாகுல்ஹமீது தொடர்ந்த வழக்கையடுத்து தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவுப்படி அமைக்கப்பட்ட மாசுகட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் அடங்கிய குழு நேற்று நாகூர் வந்தது. நாகூர், கீழவாஞ்சூர், தனியார் துறைமுகம் உள்ளிட்ட பகுதிகளில் காற்று மாசு கருவிகளை பொருத்தி அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மேலும் நிலக்கரியை கையாளும் முறை குறித்தும், செயல்பாடுகள் குறித்தும் தனியார் துறைமுகத்தில் மாசுகட்டுப்பாடு துறை அதிகாரிகள் நேரடியாக ஆய்வு மேற்கொண்டனர். 2வது நாளாக இன்றும் இந்த ஆய்வு நடந்து வருகிறது. நாகூர் மற்றும் பனங்குடி, நரிமணம் பகுதிகளில் உள்ள வீட்டு ஜன்னல்களில் நிலக்கரி துகள்கள் படிந்துள்ளதா என மாசு கட்டுப்பாட்டு குழுவினர் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி