புதுடெல்லி: வராக்கடன் உள்ளிட்டவற்றால் பொதுத்துறை வங்கிகளின் நிதி நிலை மிகுந்த தள்ளாட்டத்தில் உள்ளது. இவற்றை மீட்க மத்திய அரசு மறு மூலதன நிதி அளிக்கிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் பொதுத்துறை வங்கிகளுக்கு மறு சீரமைப்பு பத்திரங்கள் மூலம் ரூ.28,615 கோடி வழங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது 12 பொதுத்துறை வங்கிகளுக்கு நிதி வழங்கப்படுகிறது. இதுகுறித்து மத்திய அரசின் நிதிச்சேவைகள் துறை செயலாளர் ராஜீவ் குமார் கூறியதாவது: நடப்பு நிதியாண்டில் 12 பொதுத்துறை வங்கிகளுக்கு அவற்றின் மூலதன தேவை மற்றும் நிதி வளர்ச்சி திட்டங்களுக்காக ரூ.48,239 கோடியை மத்திய அரசு வழங்க முடிவு செய்துள்ளது.
இதில் சிறந்த செயல்பாட்டில் உள்ள கார்ப்பொரேஷன் வங்கிக்கு ரூ.9,086 கோடி, அலகாபாத் வங்கிக்கு ரூ.6,896 கோடி வழங்கப்படுகிறது. இதுபோல் ரிசர்வ் வங்கியின் பிசிஏ நடவடிக்கையில் இருந்து விலக்கப்பட்ட, கண்காணிப்பில் உள்ள வங்கிகளுக்கு அதற்கு ஏற்ப நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார். வங்கிகளில் சிறந்த நிதி ஆரோக்கியத்தை பராமரிக்க உடனடி சரிசெய்யும் நடவடிக்கை (பிசிஏ) கட்டமைப்பை இந்திய ரிசர்வ் வங்கி ஏற்படுத்தியுள்ளது. முதலீடு, சொத்து, லாபம் ஈட்டும் தன்மை போன்றவற்றில் அபாய நிலையை எட்டும்போது சரிபார்ப்பு நடவடிக்கையை ரிசர்வ் வங்கி மேற்கொள்கிறது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி