சென்னை: சென்னையில் அலுவலகம் கட்ட அனுமதி பெற தமிழக அரசு அதிகாரிகளுக்கு ரூ.26 கோடி லஞ்சம் அளித்த வழக்கில் விதிகளை மீறியதற்காக 28 கோடி டாலர் தொகையை அமெரிக்க பங்குச் சந்தைக்கு செலுத்த ஒப்புக்கொண்டுள்ளது. அதனால், தமிழக லஞ்ச ஒழிப்பு துறை, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது. சென்னையில், 270 லட்சம் சதுர அடியில் தனது அலுவலகம் அமைக்க அனுமதி அளிக்ககோரி அமெரிக்காவைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ‘காக்னிசன்ட்’ 2014 ம் ஆண்டு தமிழக அரசுக்கு விண்ணப்பித்தது. இதனைத் தொடர்ந்து அனுமதி அளிக்க தமிழக அதிகாரிகள் ரூ.26 கோடி லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அப்போது காக்னிசன்ட் நிறுவனத் தலைவராக இருந்த கோர்டன் கோபுர்ன் (55) மற்றும் தலைமை சட்ட அதிகாரி ஸ்டீவன் ஷெவார்ட்ஸ் (51) ஆகியோர், தங்களது ஒப்பந்ததாரர் மூலம் இத்தொகைய வழங்க ஒப்புதல் அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து அமெரிக்க அரசின் நீதித்துறை மற்றும் அமெரிக்க பங்கு மற்றும் பரிவர்த்தனை ஆணையம் விசாரணை நடத்தியது. இதில், நேர்மையாக செயல்பட வேண்டிய நிறுவன அதிகாரிகள் லட்சக்கணக்கான டாலரை இரு தவணைகளில் லஞ்சமாக அளித்ததும், இதை காக்னிசன்ட் மறைத்துள்ளதும் தெரியவந்தது. இது தொடர்பாக அமெரிக்க பங்கு மற்றும் பரிவரத்தனை ஆணையம் அனுப்பிய அறிக்கையில், தவறான தகவலை அளித்ததற்காக மேற்கண்ட இரு அதிகாரிகளும் தண்டனை பெற வேண்டியவர்கள் என்றும் குறிப்பிட்டது. இவ்வழக்கு கடந்த ஐந்து ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், அமெரிக்க நீதித்துறை மற்றும் பங்குச் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் ஆகியவற்றுக்கு, லஞ்ச விதிமீறல் நடவடிக்கைக்கு 28 கோடி டாலர் அபராதம் செலுத்த ஒப்புக்கொண்டுள்ளதாக ‘காக்னிசன்ட்’ நிறுவனத்தின் தலைவர் பிரான்சிஸ்கோ டி சவுசா அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் ‘காக்னிசன்ட்’ நிறுவனம் தமிழக அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்திருப்பது, அந்த நிறுவனத்தின் மீது அமெரிக்க நீதித்துறை பிறப்பித்த உத்தரவில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அதனால், லஞ்சம் பெற்ற தமிழகத்தை சேர்ந்த அதிகாரிகள் மீது தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் கண்காணிப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, ஊழல் தடுப்பு அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி