புதுச்சேரி: முதல்வர் நாராயணசாமியின் 39 கோரிக்கைகள் குறித்து கவர்னர் கிரண்பேடியிடம் நாலரை மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார். கவர்னர் கிரண்பேடியை திரும்பப்பெற வேண்டும், 39 மக்கள் பிரச்னைகளை தீர்க்க வேண்டுமென வலியுறுத்தி புதுச்சேரியில் நேற்று 6வது நாளாக முதல்வர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். போராட்டம் நடந்து கொண்டிருக்கும் போதே, டெல்லி சென்றிருந்த கிரண்பேடி 21ம் தேதி புதுவை திரும்ப திட்டமிட்டிருந்தார். போராட்டம் தீவிரம் அடைந்ததால், டெல்லி நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு நேற்று முன்தினம் புதுச்சேரி திரும்பினார். உடனே முதல்வர் மற்றும் அமைச்சர்களை பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். ஆனால் முதல்வர் தரப்பில் இருந்து தலைமை செயலகத்தில்தான் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும், அனைத்து செயலர்களும் இருக்க வேண்டும், 40க்கும் மேற்பட்ட கோப்புகள் தயாராக இருக்க வேண்டும், அரசால் அங்கீகரிக்கப்படாத கவர்னரின் ஆலோசகர் தேவநீதிதாஸ் கூட்டத்தில் கலந்துகொள்ளக்கூடாது என நிபந்தனை விதித்தார்.
இதனை கிரண்பேடி ஏற்றுக்கொள்ளாமல் நிராகரித்தார். மீண்டும் பேச்சுவார்த்தை எங்கு, எப்போது என்பதை தெரிவித்தால் பரிசீலிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்திருந்தார். இதையடுத்து அமைச்சர்களுடன் நாராயணசாமி அவசர ஆலோசனை நடத்தினார். இதில் ஒருசில நிபந்தனைகளை தளர்த்திக்கொள்ள முடிவு செய்யப்பட்டது. இத்தகவல் ராஜ்நிவாசுக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று காலை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. மாலை 5 மணிக்கு முதல்வர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்களை ராஜ்நிவாஸ் தர்பார் ஹாலில் பேச்சுவார்த்தைக்கு வருமாறு கிரண்பேடி தெரிவித்திருந்தார்.அதன்படி முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணா ராவ், கந்தசாமி, ஷாஜகான், கமலக்கண்ணன் ஆகியோர் கவர்னர் மாளிகைக்குள் பேச்சுவார்த்தைக்காக சென்றனர். சரியாக 5.05 மணிக்கு பேச்சுவார்த்ைத தொடங்கியது.
இதில் அனைத்து செயலர்கள், தலைமை செயலர்கள் மற்றும் கவர்னரின் செயலர், முதல்வரின் செயலர் ஆகியோர் கலந்து கொண்டனர். கவர்னரின் ஆலோசகர் தேவநீதிதாசும் கூட்டத்தில் கலந்துகொண்டார். கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் பேசப்பட்டது. நான்கரை மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தை இரவு 9.30 மணியளவில் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியே வந்த முதல்வர் நாராயணசாமி, ‘அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், கூட்டணி கட்சி தலை வர்களுடன் ஆலோசனை நடத்தி தனது முடிவை தெரிவிப்பதாக நிருபர்களி டம் தெரிவித்தார். இதற்கிடையே ஆம் ஆத்மி கட்சி தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணிஷ் சிசோடியா ஆகியோர் நேற்று காலை முதல்வர் நாராயணசாமியை சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி