×

17 பேர் கருகி இறந்த டெல்லி ஓட்டல் தீ விபத்தில் திருச்சி பல் டாக்டரும் பலி

திருச்சி: மத்திய டெல்லி கரோல் பாக்கில் உள்ள பிரபல ஓட்டலில் நேற்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில்   இறந்த 17 பேரில் திருச்சி டாக்டரும் ஒருவர். அவரது உடல் இன்று திருச்சி கொண்டுவரப்படுகிறது. டெல்லி கரோல் பாக் குருத்வாரா சாலையில், 6 மாடி கட்டிடத்தில் அர்பித் பேலஸ் என்ற பிரபல  சொகுசு ஓட்டல் இயங்கி வருகிறது.  சமீபத்தில் காஜியபாத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கேரளாவைச் சேர்ந்த 13 பேர் குடும்பமாக வந்து தங்கியிருந்தனர். இதேபோல் பல இடங்களை சேர்ந்த 120க்கு மேற்பட்டோர் திருமணம், தொழில் ரீதியாக ஓரிரு நாட்களுக்கு தங்கியிருந்தனர். இந்நிலையில், நேற்று அதிகாலை 3.30 மணியானபோது, மேல்தளங்களில் திடீரென தீப்பற்றி எரிந்தது.  இதில் 17 பேர் பலியானார்கள். விபத்து ஏற்பட்ட ஓட்டலில் திருப்பூர் அம்மாபாளையம் சொர்ணபுரி லே-அவுட் பகுதியை சேர்ந்த அரவிந்த் சுகுமாரன் (43), கொங்குமெயின் ரோட்டை சேர்ந்த நந்தகுமார் (38) ஆகிய இருவர் தங்கியிருந்தனர். அவர்களும் தீ விபத்தில் உயிரிழந்தது தெரியவந்தது. இவர்கள் திருப்பூரில் உள்ள பிரபலமான நிறுவனத்தில் மெர்சன்டைசராக பணிபுரிந்து வந்தனர்.

நிறுவனத்தின் சார்பில், வியாபாரம் தொடர்பாக வெளிநாட்டு வியாபாரிகளை சந்திப்பதற்காக டெல்லி சென்று ஓட்டலில் தங்கியிருந்த போது, தீ விபத்தில் சிக்கி பலியாகியுள்ளனர். இதுகுறித்து டெல்லி போலீசார் திருப்பூரில் அவர்கள் பணிபுரிந்த நிறுவனத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீவிபத்தில் இறந்த அரவிந்த் சுகுமாருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மீட்பு பணி முடிந்த நிலையில் மொத்தம் 17 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. மேலும் காயமடைந்த 35 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் இறந்தவர்களில் மேலும் ஒருவர் திருச்சியை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டு உள்ளது. திருச்சி வயலூர் ரோடு பகுதியை சேர்ந்த அவரது பெயர் சங்கரநாராயணன்(55). இவர் பல் டாக்டர் ஆவார். இவர் திருச்சியில் ஒரு தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். டெல்லியில் நடைபெற்ற ஒரு மருத்துவ கருத்தரங்கில் பங்கேற்பதற்காக சென்ற அவர் அர்பித் பேலஸ் ஓட்டலில் தங்கி இருந்த போது தீ விபத்தில் சிக்கி பலியாகி உள்ளார்.

டாக்டர் சங்கரநாராயணன் பலியானது பற்றிய தகவல் நேற்றிரவு தான் திருச்சியில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு கிடைத்தது. இந்த தகவலை கேட்டதும் அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர். இதனால் அவரது வீடு அமைந்துள்ள பகுதியே சோகமானது. தீ விபத்தில்  பலியான திருச்சி சங்கரநாராயணன், திருப்பூரை சேர்ந்த அரவிந்த்  சுகுமாறன், நந்தகுமார் ஆகியோரது உடல்களை சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள்  நடந்து வருகிறது. டாக்டர் சங்கரநாராயணன் உடல் இன்று திருச்சிக்கு கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தீ விபத்தில் பலியான 17 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.5லட்சம் கோர விபத்து நடந்த இடத்தை முதல்வர் கெஜ்ரிவால், நகர்புற மேம்பாட்டு  துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.  இறந்தவர்கள் குடும்பத்துக்கு வருத்தம் தெரிவித்த கெஜ்ரிவால்,  ‘விபத்துக்கான காரணத்தை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும்.  விபத்தில் உயிரிழந்த 17 பேர் குடும்பத்துக்கு தலா ₹5 லட்சம்  இழப்பீடு வழங்கப்படும்’ என்று கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Tiruchirapalli ,doctor ,hotel fire ,Delhi , Delhi hotel fire accident, Trichy dentist doctor, kills
× RELATED பொன்னமராவதி அருகே செம்பூதியில் கால்நடை மருத்துவ விழிப்புணர்வு முகாம்