சென்னை: ஓய்வூதியம் கிடைக்காமல் 44 மாதங்களாக அவதிப்பட்டு வரும் விளையாட்டு வீரரின் விவகாரத்தில் 4 வாரத்தில் பதிலளிக்க மாநில மனித உரிமை ஆணையம் தமிழக விளையாட்டுத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.தூத்துக்குடி, கோவில்பட்டியை சேர்ந்தவர் பொன்னுவேல் சாமி(69), இவர் கடந்த 1977ம் ஆண்டு தேசிய அளவிலான பளுதூக்கும் போட்டி, 1985ம் ஆண்டு ராஜபாளையத்தில் நடைபெற்ற மாநில அளவிலான பளுதூக்கும் போட்டியில் கலந்து கொண்டு 3ம் இடம் பெற்றுள்ளார். இவருக்கு தமிழக அரசின் நலிந்த வயதான விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வுதிய திட்டத்தின் கீழ் மாதம் ஓய்வுதியம் அளிக்கப்பட்டு வந்துள்ளது.
இந்தநிலையில் கடந்த 2016ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் இவருக்கு வழங்கப்பட்டு வந்த ஓய்வூதியம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பொன்னுவேல் சாமி இது குறித்து அதிகாரிகள், முதல்வர் தனிப்பிரிவு என பல இடங்களில் புகார் அளித்துள்ளார். ஆனால் யாரும், எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர். இதனால் அவர் 44 மாதமாக தனக்கு கிடைக்க வேண்டிய ஓய்வூதியம் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறார். இந்த விவகாரம் நேற்று முன்தினம் தினகரன் நாளிதழில் வெளியானது. செய்தியை பார்த்த மாநில மனித உரிமை ஆணையம், தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தியது. அப்போது இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசின், விளையாட்டுத்துறை உறுப்பினர் செயலாளர் 4 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி