திருமலை: திருப்பதி கோயிலில் ரத சப்தமியையொட்டி நேற்று ஒரே நாளில் 7 வாகனங்களில் மலையப்ப சுவாமி பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு தரிசனம் செய்தனர்.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரத சப்தமி நேற்று நடந்தது. இதையொட்டி அதிகாலை 5.30 மணியளவில் 7 குதிரைகளுடன் கூடிய தங்க சூரிய பிரபை வாகனத்தில் சிவப்பு பட்டு உடுத்தி தங்க, வைர ஆபரணங்கள் அணிந்து மலையப்ப சுவாமி எழுந்தருளி நான்கு மாடவீதிகளில் உலா வந்தார். அப்போது அங்கு திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் ‘கோவிந்தா, கோவிந்தா’ என்று பக்தி முழக்கமிட்டு தரிசனம் செய்தனர்.பின்னர் வடமேற்கு மாடவீதியில் சூரிய உதயத்திற்காக மலையப்ப சுவாமி காத்திருந்தார். தொடர்ந்து சூரியக்கதிர்கள் சுவாமியின் மீது பட்ட பின்னர் சூரியனுக்கும், மலையப்ப சுவாமிக்கும் சிறப்பு கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது. இதையடுத்து சுவாமி ஊர்வலமாக வாகன மண்டபத்தில் எழுந்தருளினார்.
தொடர்ந்து 9 மணியளவில் சின்ன சேஷ வாகனம், 11 மணியளவில் கருட வாகனம், 1 மணியளவில் அனுமந்த வாகனங்களில் மலையப்பசுவாமி எழுந்தருளினார். மதியம் 2 மணியளவில் வராக சுவாமி கோயில் எதிரே உள்ள ஏழுமலையான் கோயில் தெப்பக்குளத்தில் தீர்த்தவாரி நடந்தது. இதையடுத்து லட்சக்கணக்கான பக்தர்கள் தெப்பக்குளத்தில் புனிதநீராடினர். பின்னர் கற்பக விருட்சம், சர்வபூபாளம், சந்திரபிரபை வாகனங்களில் இரவு வரை மலையப்ப சுவாமி அடுத்தடுத்து எழுந்தருளி மாடவீதிகளில் உலா வந்து அருள்பாலித்தார்.455 ஆண்டுகளாக தொடரும் உற்சவம்கடந்த 1564ம் ஆண்டு முதல் தற்போது வரை 455 ஆண்டுகளாக ஏழுமலையான் கோயிலில் காலை சூரிய உதயத்தில் இருந்து இரவு சந்திர உதயம் வரை தொடர்ந்து பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா வருவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி