திருவலம்: திருவலம் பேரூராட்சி கெம்பராஜபுரம் கிராமத்தில் 2ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்குள்ள 500 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்களில் இப்பகுதியினர் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த நிலங்களுக்கு பொன்னையாற்றில் இருந்து வரும் பாசன நீர் கால்வாய் மூலம் நீர்பாசனம் செய்யப்படுகிறது. இந்த பாசன கால்வாய் பகுதியில் பழமை வாய்ந்த விநாயகர் கோயில் உள்ளது. இக்கோயிலில் இப்பகுதியினர் மற்றும் சுற்றுப்புற மக்கள் கால்வாய் வழியாக வந்து தரிசிப்பது வழக்கம். இப்பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் விவசாய நிலங்களில் உள்ள பம்புசெட்களுக்கு மின் இணைப்பு வசதிக்காக 9 மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு அதில், 4 மின் கம்பங்களில் மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் பலத்த காற்றுடன் ஏற்பட்ட மழையின் காரணமாக மின்கம்பங்களுக்கு செல்லும் மின் கம்பிகள் 3 இடங்களில் அறுந்து விழுந்துள்ளன. இதனால் இங்கு இருள் சூழந்து காணப்படுவதால் இவ்வழியாக செல்ல அச்சமடைகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் கூறியும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லையாம். எனவே விபத்து ஏற்படும் முன் அறுந்து விழுந்துள்ள மின்கம்பிகளை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி