சென்னை: கபாலீஸ்வரர் கோயில் குளம் காரிய மண்டபத்துக்கு வரும் பக்தர்களிடம் மந்திரம் தெரியாத நபர்கள் உள்ளே நுழைந்து பணம் பறிக்கும் நோக்கில் திதி கொடுப்பது தடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று இணை ஆணையர் காவேரி தெரிவித்தார். இது குறித்து மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் இணை ஆணையர் காவேரி வெளியிட்டுள்ள அறிக்கை:ஒவ்வொரு அமாவாசையை முன்னிட்டும், பொதுமக்கள் இப்பகுதியில் திருக்குளத்தைச் சுற்றியும் குளப்படிக்கட்டுகளிலும் தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். வழக்கமாக தர்ப்பணம் கொடுப்பவர்கள் இத்திருக்குளத்தின் வடமேற்குப் பகுதியில் உள்ள காரிய மண்டபத்தின் நுழைவு வாயிலின் அருகில் திருக்குளத்தின் உள்ளே உள்ள மண்டபத்தில் அமர்ந்து தர்ப்பணம் கொடுப்பதற்கு திருக்கோயில் சார்பாக தண்ணீர் வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. இங்குதான் ஏராளமான பொதுமக்கள் தர்ப்பணம் கொடுத்து வருவது வழக்கமாக உள்ளது. ஒருசிலர் திருக்குளத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள நுழைவாயில் வழியாக திருக்குளத்தின் படிக்கட்டுகளில் அமர்ந்து, சமீப காலமாக தர்ப்பணம் செய்கின்றனர்.
திருக்குளத்தின் கிழக்குப் பகுதியில் வருடத்திற்கு 21 முறை அருள்மிகு கபாலீஸ்வரர் சுவாமியின் அஸ்த்தர தேவர் தீர்த்தவாரி செய்யப்படுவது வழக்கம். இதன் காரணமாகவே தற்போது திருக்குளத்தின் தெற்கு குளக்கரை பகுதியும், வடமேற்கில் உள்ள காரிய மண்டபத்திலும் தர்ப்பணம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சமீப காலமாக தர்ப்பணம் செய்து வைக்க (பணம் சம்பாதிக்கும் நோக்கில்) மந்திரங்களை சரிவர முறைப்படி உச்சரிப்பு செய்யாமல் புரோகிதம் செய்யும் பணியில் அல்லாத மற்ற நபர்களும் தவறுதலாக உள்நுழைந்து திதி கொடுத்து வருகின்றனர். இனிவரும் காலங்களில் பக்தர்கள் தங்கள் முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுப்பதற்கு திருகுளக்கரையின் வடமேற்கு கரையில் உள்ள தர்ப்பண மண்டபத்திலேயே திதி மற்றும் தர்ப்பணம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். திருக்கோயில் சார்பாக ஓரிரு இடங்களில் மட்டும் மேற்படி நபர்களை (சுமார் 60 புரோகிதர்கள்) முறைப்படுத்தி, தர்ப்பணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி