சென்னை: கிண்டி ராஜ்பவன் கேட்டின் மீது ஏறி குதித்து தாண்டிய போதை ஆசாமியை மடக்கிப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கிண்டி ராஜ்பவன் ஊழியர்கள் குடியிருப்பு பகுதிக்கு செல்லும் நுழைவாயில் கேட் உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவில் வாலிபர் ஒருவர் இந்த கேட்டின் மேல் ஏறி உள்ளே குதிப்பதை கவர்னர் மாளிகை பாதுகாப்பு படையினர் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே ஓடிவந்து அவரை பிடித்து கிண்டி போலீசாருக்கு தகவல் கொடுத்து அவர்களிடம் ஒப்படைத்தனர். போலீசாரின் விசாரணையில், அந்த நபர் வந்தவாசியை சேர்ந்த செல்வராஜ் (24) என்பதும், கே.கே.நகரில் கட்டுமான பணிக்காக வந்தவர், குடிபோதையில் விலாசம் தெரியாமல் ராஜ்பவன் கேட் ஏறி குதித்ததும் தெரியவந்தது. இதுகுறித்து கிண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி