சென்னை: தேச துரோக வழக்கு விசாரணைக்காக சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று வைகோ ஆஜரானார். சென்னை ராணி சீதை மன்றத்தில் கடந்த 2009 ஜூன் மாதம் “நான் குற்றம் சாட்டுகிறேன்” என்ற தலைப்பில் புத்தக வெளியீட்டு விழா நடந்தது. இதில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும் இந்திய அரசுக்கு எதிராகவும் பேசியதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீது ஆயிரம் விளக்கு போலீசார், தேசதுரோக வழக்குப்பதிவு செய்தனர். இதில் சிறையில் அடைக்கப்பட்ட வைகோ, ஜாமீனில் வந்தார். இந்த வழக்கில் வைகோ மீது குற்றச்சாட்டு பதிவு முடிந்து சாட்சிகள் விசாரணை நடைபெற இருந்த நிலையில், செஷன்ஸ் நீதிமன்றத்தில் இருந்து சிறப்பு நீதிமன்றத்துக்கு இவ்வழக்கு மாற்றப்பட்டது.
இதன்பிறகு வழக்கு விசாரணைக்கு வந்தபோது சென்னை கலெக்டர் அலுவலகத்தில் அமைந்துள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி சாந்தி முன்பு வைகோ ஆஜரானார். அப்போது அரசு தரப்பு சாட்சிகள் பதிவு தொடங்கியது.
இந்நிலையில், நேற்று மீண்டும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது வைகோ ஆஜரானார். இதையடுத்து இந்த வழக்கை வரும் 6ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.அப்போது, ‘வைகோ வெளிநாடு செல்ல இருப்பதாகவும் முடக்கி வைக்கப்பட்டுள்ள பாஸ்போர்ட்டை தரவேண்டும்’ எனவும் வைகோ தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. ‘வைகோ மலேசியாவுக்கு செல்ல ஆட்சேபம் இல்லை’ என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை பதில் மனுவாக தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி