புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூரின் மனைவி மர்மமான முறையில் இறந்தது தொடர்பான வழக்கு விசாரணையை, செசன்ஸ் நீதிமன்றம் விசாரிக்க மாஜிஸ்திரேட் நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. முன்னாள் மத்திய அமைச்சரான சசிதரூரின் மனைவி சுனந்தா புஸ்கர். சசிதரூரின் அதிகாரப்பூர்வ பங்களாவில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்ததையடுத்து, தம்பதி இருவரும் ஆடம்பர நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தற்காலிகமாக தங்கினர். இந்நிலையில், கடந்த 2014ம் ஆண்டு ஜனவரி 17ம் தேதியன்று ஓட்டல் அறையில் சுனந்தா புஸ்கர் இறந்த நிலையில் மீட்கப்பட்டார்.
இது கொலையா அல்லது தற்கொலையா என்பது தெரியாத நிலையில், சசிதரூர் மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 498-ஏ(கணவன் அல்லது அவரது உறவினர்கள் பெண்ணை துன்புறுத்துதல்) மற்றும் பிரிவு 306ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. எனினும், இந்த வழக்கில் தரூர் இதுவரை கைது செய்யப்படவில்லை. இந்த வழக்கை கூடுதல் தலைமை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் விசாரித்து வந்தது. இந்நிலையில், இந்திய தண்டனை சட்டம் பிரிவு 306ன் கீழ் (தற்கொலைக்கு தூண்டுதல்) சசிதருர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதையடுத்து, இதனை செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி மட்டுமே விசாரிக்க இயலும் என்பதன் அடிப்படையில், கூடுதல் தலைமை மாஜிஸ்திரேட் நீதிபதி சமர் விஷால், இந்த இந்த வழக்கை கூடுதல் செசன்ஸ் நீதிபதி அருண் பரத்வாஜ் விசாரிக்க பரிந்துரைத்தார். மேலும், வழக்கு ஆவணங்களை பாதுகாப்பாக வைக்குமாறு டெல்லி போலீசாருக்கு உத்தரவிட்டார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி