சேலம்: சேலம் மாநகரில் தொடர் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த ரவுடிகளை அவர்கள் வீடுகளுக்கே சென்று போலீசார் அதிரடியாக கைது செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ரவுடிகளின் பெற்றோர் மற்றும் அவர்களது உறவினர்களுக்கு காவல்துறை அதிகாரிகள் அறிவுரை வழங்கியதுடன், எச்சரிக்கையும் செய்துள்ளனர். சேலம் நகரில் வழிப்பறி, செயின் பறிப்பு போன்ற குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதனை கட்டுப்படுத்தும் வகையில் சேலம் மாநகர காவல் ஆணையர் சங்கர் உத்தரவின் பேரில், அந்தந்த காவல் நிலைய ஆய்வாளர்கள் தலையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டது. அதிகாலை முதல் நகரின் பல்வேறு பகுதிகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வரும் போலீசார், ரவுடிகளின் வீடுகளுக்கே சென்று அவர்களது பெற்றோரையும், அவர்களது உறவினர்களையும் அழைத்து ரவுடிகளின் அட்டகாசம் குறித்து அறிவுரை கூறி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள ஜான்சன்பட்டி பகுதியில் சேலம் மாநகர துணை ஆணையர் தங்கதுரை தலைமையிலான காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள ரவுடிகளின் இல்லங்களுக்கு சென்று அவர்களது பெற்றோருக்கு அறிவுரை வழங்கி அவர்களை கைது செய்து வருகின்றனர். மேலும் சேலம் கிச்சிம்பாளையம் பகுதியில் சேலம் மாநகர துணை ஆணையர் ஷியாமலா தேவி தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ஈடுபட்டு வரும் ரவுடிகளை கைது செய்து வருகின்றனர். தற்போது வரை 30 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடிகளை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி