சென்னை: ஒசூர், நெய்வேலி, ராமநாதபுரத்துக்கு விமான சேவை துவங்க வேண்டும் என்று பிரதமரிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை மனு அளித்தார்.மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பிரதமர் மோடியிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை மனு ஒன்றை நேரில் அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:
* அண்ணா, ஜெயலலிதா ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்.
* சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயரை சூட்ட வேண்டும்.
* மேகதாது அணை கட்டுவதற்காக விரிவான திட்ட அறிக்கை கர்நாடக அரசுக்கு மத்திய நீர்வள ஆணையம் வழங்கியுள்ள அனுமதியை ரத்து செய்ய வேண்டும்.
* கேரளாவில் புதிய முல்லை பெரியாறு அணை கட்டுவதற்கான ஆய்வு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும். 152 அடியாக தண்ணீர் இருக்கும் படி செய்ய வேண்டும்.
* கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைப்பதற்கும் நிரந்தர தீர்வு காண்பதற்கு மாநில துயர்துடைப்பு நிவாரண நிதி பெறுவதில் திருத்தம் செய்ய வேண்டும்.
* காவிரி வடிநில நீர்பாசன வசதிகளை மேம்படுத்துவதற்காக முழுமையான திட்ட அறிக்கையில் 9 பணிகளை செய்வதற்கு ₹17,600 கோடியை ஒதுக்க மத்திய நீர்வளத்துறை அமைச்சக்கத்திற்கு உத்தரவிட வேண்டும்.
* தமிழக மீனவர்கள் வசதிக்காக நிரந்தர புயல்பாதிப்பு துயர் துடைப்பு மையம் ஏற்படுத்துவதோடு, தொடர்பு சாதனங்கள், சாட்டிலைட் போன்கள் வாங்க ₹400 கோடி நிதி ஒதுக்க சம்பந்தப்பட்ட அமைச்சகத்திற்கு அறிவுறுத்த வேண்டும்.
* 2017-18, 2018-19ம் ஆண்டுக்கு தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய சரக்கு மற்றும் சேவை வரி செட்டில்மென்ட் தவணை தொகை வழங்கப்பட வேண்டும்.
* சேலம் உருக்கு ஆலையில் காலியாக உள்ள இடங்களில் பாதுகாப்பு துறைக்கான சாதனங்கள் உற்பத்தி செய்வதற்கான தொழில்மையம் உருவாக்குவதற்கும், நடைமுறைப்படுத்துவதற்கும் மத்திய பாதுகாப்பு அமைச்சக்கத்திற்கு உத்தரவிட வேண்டும்.
* விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலைகளில் வேலை செய்யும் 8 லட்சம் பேரை பாதுகாக்க, சுற்றுச்சூழல், வனத்துறை விதி 3 (பி) நடைமுறைப்படுத்தவும், திருத்தங்கள், விதிவிலக்குகளை கொண்டு வர வேண்டும்.
* உதான் திட்டத்தின் கீழ் ஒசூர், நெய்வேலி, ராமநாதபுரத்துக்கு விமானங்கள் இயக்க வேண்டும் சேலம்-சென்னை இடையே மாலை நேரங்களில் விமானம் இயக்க வேண்டும்.
* மத்திய அரசு உதவியுடன் ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி தொடங்க விதிகளில் தளர்வு செய்ய வேண்டும்.
* தமிழக விவசாயிகள் மீனவர்களுக்கு பயன்படும் வகையில் ஊட்டியில் மத்திய உருளைக்கிழங்கு ஆய்வு நிலையம், சென்னையில் மத்திய உவர்நீர் நீர்வாழ் உயிர் ஆய்வு நிலையம், கோவையில் கரும்பு உற்பத்தி நிலையம், திருச்சியில் தேசிய வாழை ஆராய்ச்சி மையம் ஆகிய ஆய்வு நிறுவனங்கள் தமிழகத்தில் தொடர ஆவன செய்ய வேண்டும்.
* சென்னையில் மெட்ரோ ரயில் நிலைய திட்டம் அலகு 2 மத்திய மாநில அரசுகள் தலா 50 சதவீதம் இணைந்து செயல்பட ஆவன செய்ய வேண்டும்.
* ரெப்கோ வங்கியில் வைப்புத் தொகை செலுத்தும் பணி தொடர வேண்டும். இவ்வாறு அதில் முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி