கொடைக்கானல்,: கொடைக்கானல் நகராட்சி அலுவலகத்தில் நடந்த குடியரசு தினவிழாவில் இரட்டை இலையுடன், தாமரை கோலம் போடப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் நகராட்சி அலுவலகத்தில் நேற்று காலை குடியரசு தின விழா ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. விழா முன்னேற்பாடுகளில் பல்வேறு விதிமீறல் நடந்தன.
அலுவலகம் முன்பு தடை செய்யப்பட்ட கூம்பு வடிவ குழாய் வழியாக பாடல்கள் ஒலிபரப்பு செய்யப்பட்டது. மேலும் வாயிலில் பாஜ கட்சி சின்னமான தாமரை, அதிமுக சின்னமான இரட்டை இலையுடன் கோலம் வரையப்பட்டிருந்தது. இதை கண்டு விழாவுக்கு வந்தவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அடுத்ததாக நகராட்சி ஆணையர் முருகேசன் தேசிய கொடியேற்றும்போது நீண்டநேரம் கொடி அவிழாமல் இருந்தது. பின்னர் கொடியை அவிழ்க்கையில் அதன் மேல்முனை அறுந்தது. இது தெரியாமல் இருக்க அதிகாரிகள் அவசர, அவசரமாக கொடியை கம்பத்தினர் கட்டினர். இதனை கண்டு பொதுமக்கள் முகம்சுளித்தனர். முறையான முன்னேற்பாடு இல்லாததே இதுபோன்ற நிகழ்வுகளுக்கு காரணம் என புகார் தெரிவித்தனர். கோலம் குறித்து அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘தாமரை தேசிய மலர் என்பதால் கோலம் போட்டோம்’’ என்றார். அதிமுகவின் இரட்டை இலை பற்றி கேட்டதற்கு பதிலளிக்காமல் மவுனமாக சென்று விட்டார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி