×

தேன்கனிக்கோட்டையில் கடும் பனிப்பொழிவால் யானை கூட்டத்தை விரட்டும் பணியில் தொய்வு

தேன்கனிக்கோட்டை: தேன்கனிக்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று காலை கடும் பனிமூட்டம் நிலவியதால், தாவரக்கரையில் குட்டிகளுடன் முகாமிட்டுள்ள 60 யானைகளை விரட்டும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதியிலிருந்து விரட்டப்பட்ட 60 யானைகள் கடந்த ஒரு வாரமாக பேவநத்தம் வனப்பகுதியில் முகாமிட்டிருந்தன. இந்த யானைகள் பச்சனப்பட்டி, கிரிசெட்டிப்பள்ளி, காடுலக்கசந்திரம், போவநத்தம், லிங்கதீனரப்பள்ளி, திம்மசந்திரம், மேகலகவுண்டனூர் உள்ளிட்ட பகுதியில் விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை துவம்சம் செய்தன. தேன்கனிக்கோட்டை வனத்துறையினர் பட்டாசு வெடித்து காடுலக்கசந்திரம், திம்மசந்திரம், மரக்கட்டா வழியாக தாவரகரைக்கு விரட்டினர்.

தொடர்ந்து யானைகளை கண்காணித்து வந்த வனத்துறையினர், ஜவளகிரி வனப்பகுதிக்குள் விரட்டுவதற்கான நடவடிக்கை மேற்கொண்டனர். அப்போது, சூலகுண்டா வனப்பகுதி வரை சென்ற யானைகள், மீண்டும் தாவரக்கரை வனப்பகுதிக்கு திரும்பின. இதனால், வனத்துறையினர் அதிர்ச்சியடைந்தனர். தற்போது 60 யானைகளும் குட்டிகளுடன் 5வது நாளாக தாவரக்கரை வனத்திலேயே முகாமிட்டுள்ளன. அவைகள் தாவரக்கரை, மலசோனை உள்ளிட்ட பகுதிகளில் பயிர்களை நாசம் செய்து வருகின்றன. இந்நிலையில் தேன்கனிக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை கடும் பனிமூட்டம் நிலவியது. காலை 8.30 மணி வரை விலகாத பனியால், யானைகளை ஜவளகிரிக்கு விரட்டும் பணியில் தொய்வு ஏற்பட்டது. வனத்துறையினர் யானைகளை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : crowd , Denkenikotta, fog, Elephant
× RELATED ஊட்டி, கொடநாடு காட்சி முனையில் குவிந்த சுற்றுலா பயணிகள் கூட்டம்