×

தேர்தலுக்கு இன்னும் 100 நாள் பாஜ.வின் சர்வாதிகாரத்துக்கு எதிராக வெற்றி பெற வேண்டும் : சந்திரபாபு நாயுடு வேண்டுகோள்

அமராவதி: தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனர் என்.டி.ராமராவின் 23வது நினைவு தினத்தை முன்னிட்டு அமராவதியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், காணொளி காட்சி மூலம் கட்சி தொண்டர்களிடம் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசியதாவது: பாஜ உருவத்தில் தற்போது சர்வாதிகார ஆட்சியை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். பிரதமர் மோடி தன் இஷ்டப்படி செயல்படுகிறார். அவர்களுக்கு எதிராக நாம் தர்ம யுத்தம் தொடங்கியுள்ளோம். பாஜ.வுக்கு எதிரான கட்சிகள் கொல்கத்தாவில் இன்று பேரணி நடத்துகின்றன. தெலங்கானா ராஷ்டிரிய சமிதியும் (டிஆர்எஸ்), ஒய்எஸ்ஆர் காங்கிரசும் மோடி ஆதரவு அணியில் உள்ளதால், அவர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்கவில்லை. நாட்டில் தற்போது இரண்டே அணிகள்தான் உள்ளன. ஒன்று மோடி ஆதரவு அணி. மற்றொன்று மோடிக்கு எதிரான அணி.

திரிணாமுல் காங்கிரஸ் நடத்தும் பேரணியில் டிஆர்எஸ் மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கலந்து கொள்ளாததால் அவர்கள் எந்த அணியில் உள்ளனர் என்பது தெளிவாக தெரிகிறது. ஆந்திராவில் சட்டப்பேரவை தேர்தலுக்கும், மக்களவை தேர்தலுக்கும் 100 நாட்களே உள்ளன. அதனால், கட்சியின் வெற்றிக்கு தொண்டர்கள் பாடுபட வேண்டும். அப்போதுதான், தேசிய அரசியலில் நாம் முக்கிய பங்காற்ற முடியும். ஆந்திராவின் நலனை நிறைவேற்ற நாம் குழுவாக இணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chandrababu Naidu ,BJP , Election ,win over 100 days,BJP dictatorship, Chandrababu Naidu request
× RELATED கர்நாடகாவில் ஆபாச வீடியோ விவகாரம்...