புதுடெல்லி: டிடிவி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அதிமுகவில் மீண்டும் இணைய மறுத்ததால்தான் தகுதி நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக 11 எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான வழக்கு விசாரணையில் ஓபிஎஸ் தரப்பில் நேற்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வாக்களித்த விவகாரத்தில் தற்போதைய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என திமுக கொறடா சக்கரபாணி தொடர்ந்த மேல்முறையீடு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக்பூஷன் மற்றும் அப்துல் நசீர் ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் குருகிருஷ்ண குமார் வாதத்தில், “11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய கூறுவது என்பது நியாயமான ஒன்று கிடையாது. இந்த வழக்கு அரசியல் உள்நோக்கம் கொண்டதாகும். வழக்கில் இரண்டாவது மனுதாரராக இருக்கும் வெற்றிவேல், தங்கதமிழ்ச்செல்வன் ஆகியோர் தாக்கல் செய்துள்ள மனு என்பது உள்நோக்கம் கொண்டது என்பதால் அதனை ரத்து செய்ய வேண்டும்.
மேலும் அதிமுகவிற்கு எதிராக டிடிவி.தினகரன் ஆதரவாளர்களான 18 எம்.எல்.ஏ.க்கள் கவர்னருக்கு கடிதம் எழுதினார்கள். ஆனால், அவர்கள் மீண்டும் எங்களது கட்சியில் இணையாததால்தான் தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இருப்பினும் இது உட்கட்சி விவகாரமாகும்’’ என வாதிட்டார். இதையடுத்து வாதங்களை கேட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை இன்றைக்கு ஒத்திவைத்தனர். இன்றைய விசாரணையின்போது, திமுக தரப்பில் வாதங்கள் முன் வைக்கப்பட உள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி