சென்னை: மாமல்லபுரத்தில் உட் கோட்ட காவல் நிலையங்களில் போலீசார் பற்றாக்குறையால் குற்றச்செயல்கள் அதிகரித்து வருகின்றன. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். மாமல்லபுரம் காவல் உட்கோட்டத்தில் கிழக்கு கடற்கரை சாலையில் மாமல்லபுரம், சதுரங்கப்பட்டினம், கல்பாக்கம், கூவத்தூர் ஆகிய காவல் நிலையங்களும், பழைய மாமல்லபுரம் சாலையில் தாழம்பூர், கேளம்பாக்கம், திருப்போரூர் ஆகிய மூன்று காவல் நிலையங்களும், மேலும், திருக்கழுக்குன்றம், மானாம்பதி, காயார் ஆகிய காவல் நிலையங்களும் உள்ளன. இந்த காவல் நிலையங்களில் ஓ.எம்.ஆரில் உள்ள தாழம்பூர், கேளம்பாக்கம், திருப்போரூர் ஆகிய காவல் நிலையங்கள் எப்போதும் பிசியாக இருக்கும். இவற்றில் பல ஐ.டி. நிறுவனங்கள், ஸ்டார் ஓட்டல்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் அமைந்துள்ள தாழம்பூர் காவல் நிலையத்தில் 60 போலீசார் பணிபுரிய வேண்டும். ஆனால் ஒரு இன்ஸ்பெக்டர், 2 எஸ்.ஐ.க்கள், 10 போலீசார் உள்ளிட்ட 13 பேர் மட்டுமே பணிபுரிகின்றனர். அதேபோன்று கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் 80 பேர் பணியில் இருக்க வேண்டும். ஆனால் ஒரு இன்ஸ்பெக்டர், 1 சட்டம் ஒழுங்கு எஸ்.ஐ., நான்கு எஸ்.எஸ்.ஐ.க்கள், 8 காவலர்கள் மட்டுமே உள்ளனர்.
அதே போன்று திருப்போரூர் காவல் நிலையத்தில் 52 பேர் வேலை செய்ய வேண்டிய இடத்தில் 11 மட்டுமே பணி புரிகின்றனர். திருப்போரூரில் இருந்து அண்மையில் பிரிக்கப்பட்ட காயார் காவல் நிலையத்தில் ஒரு பெண் எஸ்.ஐ., மூன்று காவலர்கள் மட்டுமே உள்ளனர். அதேபோன்று திருப்போரூர் இன்ஸ்பெக்டர் கட்டுப்பாட்டில் இயங்கும் மானாம்பதி காவல் நிலையத்தில் 2 எஸ்.எஸ்.ஐ., 4 காவலர்கள் மட்டுமே உள்ளனர்.பழைய மாமல்லபுரம் சாலையில் 80க்கும் மேற்பட்ட தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள், சாப்ட்வேர் பூங்கா, ஏராளமான அடுக்குமாடி குடியிருப்புகள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் உள்ளன. மேலும் இங்கு நடைபெறும் கட்டுமானப் பணிகளில் வெளி மாநிலங்களைச் சேர்ந்த 3 லட்சம் பேர் தற்காலிகமாக தங்கி உள்ளனர். அதுமட்டுமின்றி புதிய அடுக்கு மாடி குடியிருப்புகளில் 3 லட்சம் குடும்பங்கள் புதியதாக குடி வந்துள்ளனர். தினந்தோறும் பள்ளிகள், கல்லூரிகள், மென்பொருள் நிறுவனங்களில் இருந்து 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் பழைய மாமல்லபுரம் சாலை வழியாக செல்கின்றன. புதிய நபர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால் குற்றச் செயல்கள் நடைபெற்றவுடன் குற்றவாளிகளை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்படுகிறது.
இதனால், செயின் பறிப்பு, பூட்டிய வீட்டில் திருட்டு, சிலிண்டர், மோட்டார் சைக்கிள் திருட்டு போன்ற குற்றச் செயல்கள் அதிகரித்து உள்ளன. கழிப்பட்டூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நடைபெற்ற 100 சவரன் கொள்ளை சம்பவத்திலும், சிறுசேரியில் தனி வீடு ஒன்றில் நடைபெற்ற 100 சவரன் கொள்ளை சம்பவத்திலும் தாழம்பூர், கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் நடைபெற்ற பல்வேறு செயின் பறிப்பு சம்பவங்களிலும் இதுவரை குற்றவாளிகள் கண்டறியப்படவில்லை. தாழம்பூர், கேளம்பாக்கம், திருப்போரூர் காவல் நிலையங்களில் சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு ஆகியவற்றுக்கு தனித்தனி இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர்கள், குறைந்த பட்சம் 40 போலீசார்கள் இருந்தால் மட்டுமே பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு அளிப்பதோடு, இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு குற்றச்செயல்களை குறைக்க முடியும் என போலீசார் கருதுகின்றனர்.
சென்னையை ஒட்டியுள்ள முக்கிய சுற்றுலாத்தலமான மாமல்லபுரம் காவல் நிலையத்தில் 65 பேர் பணியாற்ற வேண்டும். ஆனால் ஒரு இன்ஸ்பெக்டர், ஒரு சட்டம் ஒழுங்கு எஸ்.ஐ., 2 எஸ்.எஸ்.ஐ. மற்றும் 12 போலீசார் மட்டுமே உள்ளனர். இங்கு வாரத்திற்கு ஒரு முறை வெளிநாட்டு அதிபர்கள், பல்வேறு மாநில கவர்னர்கள், தூதரக அதிகாரிகள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் என பல்வேறு தரப்பினரும் வருகின்றனர். இதனால் இவர்களுக்கு கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டல்கள், கடற்கரை ரிசார்ட்களில் அறை ஒதுக்கித் தருவதே பெரிய வேலையாக உள்ளது. இதனால், கடற்கரை பாதுகாப்பு, போக்குவரத்து ஒழுங்கு படுத்துதல், சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு போன்றவற்றில் ஈடுபட முடியாமல் போலீசார் தவிக்கின்றனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி