பெங்களூரு: ‘‘கூட்டணி ஒப்பந்தப்படி நாடாளுமன்ற தேர்தலில் மஜத.வுக்கு 12 தொகுதிகளை காங்கிரஸ் ஒதுக்க வேண்டும். அப்போதுதான், கூட்டணி தொடரும்’’ என முதல்வர் குமாரசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். கர்நாடகாவில் மஜத-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. மஜத தலைவர் குமாரசாமி முதல்வராக உள்ளார். மக்களவை தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக இரு கட்சிகளுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக பெங்களூருவில் உள்ள மஜத அலுவலகத்தில் குமாரசாமி நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:
கடந்த 7 மாதங்களுக்கு முன் காங்கிரஸ் ஆதரவுடன் முதல்வராக பொறுப்பேற்றேன். அதற்கு முன் கூட்டணி அமைப்பது குறித்து மஜத - காங்கிரஸ் இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதில் குறிப்பிடும்படியாக, நாடாளுமன்ற தேர்தலில் மஜத.வுக்கு 11 அல்லது 12 தொகுதிகள் ஒதுக்க வேண்டும், சட்டப்பேரவை தேர்தலின்போது 2ல் ஒரு பங்கு தொகுதி என்ற ஒப்பந்தத்தை நாடாளுமன்ற தேர்தலிலும் கடைபிடிக்க வேண்டும், சட்டப்பேரவை சபாநாயகர் பதவியை காங்கிரசுக்கும், மேலவை தலைவர் பதவியை மஜத.வுக்கும் விட்டுக் கொடுத்திருக்க வேண்டும். ஆனால், ஒப்பந்தப்படி காங்கிரஸ் நடந்து கொள்ளவில்லை.
ஆனால், நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்து மட்டும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என காங்கிரஸ் எதிர்பார்க்கிறது. நாடாளுமன்ற தேர்தலிலும் மஜத.வுடன் காங்கிரஸ் கூட்டணி தொடர வேண்டும் என்றால், மஜத.வுக்கு 12 தொகுதிகளை ஒதுக்க வேண்டியது அவசியம். அப்போதுதான், இந்த கூட்டணி தொடரும் என்பதில் சந்தேகம் இல்லை.
விவசாயிகளின் வங்கிக்கடனை கர்நாடக அரசு தள்ளுபடி செய்திருப்பது இந்திய வரலாற்றிலேயே சிறப்பானது. விவசாயிகளின் வங்கிக் கடனை தள்ளுபடி செய்து அவர்களை கடன் தொல்லையிலிருந்து மீட்பதே மஜத அரசின் நோக்கமாகும். இவ்வாறு அவர் கூறினார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி