புதுடெல்லி: தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாய முயற்சியால் திவால் நடவடிக்கை மூலம் 80,000 கோடி மீட்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார். வராக்கடன்களை வசூலிக்கும் முயற்சியாக திவால் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. ஆனால், அதன் பிறகும் வராக்கடன் அதிகரித்து, இந்த சட்ட செயல்பாடுகள் குறித்து விமர்சனங்கள் எழுந்தன. வராக்கடன் தொடர்பாக காங்கிரஸ் கட்சியும் விமர்சித்திருந்தது. இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி கூறியதாவது: 2016ம் ஆண்டு இறுதியில் இருந்து இதுவரை சுமார் 1,322 வழக்குகள் திவால் சட்டத்தின் கீழ் தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. விசாரணைக்கு வருவதற்கு முந்தைய நிலையிலேயே 4,452 வழக்குகளில் தீர்வு காணப்பட்டன. இதன்மூலம் 2.02 லட்சம் கோடி வசூல் ஆகியுள்ளது.
260 வழக்குகளில் சொத்துக்களை விற்று பணம் வசூலிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 66 வழக்குகள் விசாரணை முடிந்து 80,000 கோடி வசூல் ஆகியுள்ளது. இதில் பூஷண் பவர் ஸ்டீல், எஸ்ஸார் ஸ்டீல் உள்ளிட்ட 12 பெரிய நிறுவனங்களும் அடக்கம். நடப்பு நிதியாண்டு முடிவதற்குள் இன்னும் 70,000 கோடி மீட்கப்பட்டு விடும். திவால் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்ட பிறகு, அதில் நிர்வாகம் செய்வதற்கள் வெளியேற்றப்பட்டு, புதிய நேர்மையான அதிகாரிகள் அமர்த்தப்படுவார்கள். எந்த வித அரசியல் தலையீடும் இன்றி வெளிப்படையாக வழக்குகள் நடைபெறும்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி