×

திருமயம் அருகே டாஸ்மாக் விற்பனையாளரிடம் ரூ.2 லட்சம் பணம் பறிப்பு ; வழிப்பறி நாடகமா? போலீசார் விசாரணை

திருமயம்: புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே ராயவரத்தில் இருந்து பெருங்குடி வழியாக புதுக்கோட்டை செல்லும் வழியில் ஆலங்குடி நான்கு ரோடு விலக்கு அருகே ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இங்கு விற்பனையாளராக கருப்பையா வேலை செய்து வருகிறார். இவர் நேற்றிரவு 10 மணிக்கு பணி முடிந்து  டாஸ்மாக் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது மது விற்று வசூலான பணத்தை பையில் எடுத்துக்கொண்டு அந்த பையை பைக்கில் தொங்கவிட்டுவிட்டு பைக் எடுத்தார். அப்போது பைக் பஞ்சராகி நின்றது தெரியவந்தது. இதனால் அவர் பைக் அருகே  நின்றுகொண்டிருந்தார்.

அப்போது அங்கு ஒருவர் மது பாட்டில் கேட்பது போல் வந்தார். கடையை பூட்டிவிட்டதாக கூறியதால்  அந்த நபர் அங்கிருந்து செல்லாமல் கருப்பையாவிடம் பேச்சுகொடுத்துள்ளார்.  பைக் பஞ்சராகி நிற்பது பற்றி கருப்பையா கூறியுள்ளார். சிறிது நேரத்தில் அந்த நபர் பைக்கில் தொங்கிய பண பையை எடுத்துக்கொண்டு காட்டுக்குள் தப்பி ஓட்டம் பிடித்து இருட்டில் மறைந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த கருப்பையா இதுபற்றி அரிமளம் போலீசில் புகார் அளித்தார். பொன்னமராவதி டிஎஸ்பி தமிழ்மாறன், டாஸ்மாக் அதிகாரிகள் வழிபறி குறித்து கருப்பையாவிடம் விசாரனை நடத்தினர்.இதில் கருப்பையா முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவிப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதனால்  அவர் மீது சந்தேகம் வலுத்துள்ளதால்  இது பற்றி தொடர்ந்து விசாரனை நடைபெற்று வருகிறது. உண்மையிலே பணம் கொள்ளை போனதா அல்லது நாடகமா என்பது  குறித்து உண்மை நிலவரம் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : seller ,Tasmik ,Police investigation , Taskmaster seller, Rs. 2 lakhs, cash flush
× RELATED மேலூரில் டிபன் பாக்ஸ் குண்டு வீச்சு: போலீசார் விசாரணை