கோவை: கோவை மாவட்டம் பெரிய தடாகம் பகுதியில் விநாயகர் என்ற காட்டு யானையை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். விநாயகர் என்று அழைக்கப்படும் காட்டுயானை மற்றும் சின்ன தம்பி என்ற காட்டுயானையும் கடந்த 6 மாதங்களாக இந்த பகுதியில் உலா வந்து கொண்டிருப்பதாக கூறியுள்ளனர். இந்த யானைகள் உணவிற்காக ஊருக்குள் புகுந்து விளைநிலங்களில் உள்ள வாழை, தென்னை உள்ளிட்டவற்றை உட்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. விவசாய நிலங்களை நாசப்படுத்துவதால் அதனை பிடிக்க வலியுறுத்தி மக்கள் போராட்டம் நடத்தி உள்ளனர். இதையடுத்து யானைகளை ஊருக்குள் வராமல் தடுக்க 4 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு அந்த 2 யானைகளை கட்டுக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வந்தனர். ஆனால் அந்த முயற்சி பலன் அளிக்கவில்லை. காட்டுயானைகள் ஊருக்குள் நுழைந்து உயிர் சேதம் மற்றும் விவசாய நிலங்களை சேதப்படுத்தி வந்துள்ளன.
இதையடுத்து அந்த யானையை உடனடியாக பிடிக்க வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தி இருந்தனர். இதனைத்தொடர்ந்து இன்று அதிகாலை விநாயகன் என்ற காட்டு யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணியினை வனத்துறையினர் துவங்கினர். பெரிய தடாகம் அருகில் மலை அடிவாரத்தில் இருந்த விநாயகன் என்ற காட்டு யானைக்கு வனத்துறை மருத்துவர்கள் மயக்க ஊசி செலுத்தினர். இதனால் காட்டு யானை மயக்கமடைந்தது. வனத்துறை மருத்துவர் மனோகரன் தலைமையில் 4 மருத்துவர்கள் கொண்ட மருத்துவ குழுவினர் இந்த காட்டு யானையை கண்காணித்து வருகின்றனர். இதையடுத்து இந்த யானையை லாரியில் ஏற்றி முதுமலை வனப்பகுதியில் கொண்டு செல்ல வனத்துறையினர் திட்ட மிட்டுள்ளனர். இதே போல் சுற்றித் திரியும் மற்றொரு காட்டு யானையான சின்னத்தம்பி இன்று அல்லது நாளை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி