சென்னை: வங்கக்கடலில் உருவாகியுள்ள பெய்ட்டி புயல் இன்று காலை நிலவரப்படி சென்னைக்கு கிழக்கே 260 கி.மீ., தொலைவில் மையம் கொண்டுள்ளது. இன்று பிற்பகல் ஆந்திராவின் காக்கிநாடா கடற்கரை பகுதியில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து வானிலை மையம் தெரிவித்துள்ளதாவது: வங்க கடலில் உருவான பெய்ட்டி புயல் இன்று காலை சென்னைக்கு கிழக்கே 260 கி.மீ., தொலைவில் மையம் கொண்டுள்ளது.
இன்று பிற்பகல் ஆந்திராவின் காக்கிநாடா கடற்கரை பகுதியில் கரையை கடக்கும். ஆந்திராவில் நுழைந்ததும் புயல் வலுவிழக்கும். அதன்பின் ஒடிசா, மேற்கு வங்க கடலோர பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்யும். நாளை முதல் தமிழகம், புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலை நிலவும். டிச., 22 வரை பகலில் வெயில் இரவில் குளிர் இருக்கும். சில இடங்களில் திடீர் மழைக்கு வாய்ப்புள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் பேய்க்காற்று
பெய்ட்டி புயலால் சென்னையில் நேற்று இரவு பேய் காற்று வீசியதால் வீடுகளை விட்டு வெளியே வர பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு பேய்காற்று வீசியது. இதனால் மரங்கள் முறிந்து விழும் அபாயம் இருந்ததால், பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே செல்லவில்லை. வீடுகளில் தங்கி இருந்த பொதுமக்களும் அச்சத்துடனேயே காணப்பட்டனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி