லண்டன்: அயர்லாந்தில் கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்கும் வரலாற்று சிறப்புமிக்க மசோதா நிறைவேறியது. இந்திய பல் டாக்டர் சவீதா ஹாலப்பனவரின் மரணத்தால் இந்த மாற்றம் பிறந்துள்ளது. கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் அதிகம் வாழும் நாடான அயர்லாந்தில் கருக்கலைப்பு செய்வது சட்ட விரோதமானது. கருக்கலைப்புக்கு எதிராக கடுமையான சட்ட, திட்டங்கள் உள்ளன. இதன் காரணமாக, கடந்த 2012ம் ஆண்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் கருவை கலைக்க அனுமதி கிடைக்காததால், இந்திய வம்சாவளியை சேர்ந்த பல் டாக்டர் சவீதா ஹாலப்பனவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது அயர்லாந்தில் மிகப்பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது.
கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்கக் கோரி பல பெண்களும் கோரிக்கை விடுத்தனர். இதனால், கருக்கலைப்புக்கு அனுமதி வழங்கும் எட்டாவது சட்ட திருத்தத்தை மேற்கொள்வது தொடர்பாக மக்களின் கருத்தை அறிய கடந்த மே மாதம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில், 66.4 சதவீதம் பேர் ஆதரவாக வாக்களித்தனர்.அதைத்தொடர்ந்து, இதற்கான சட்ட மசோதா கடந்த அக்டோபரில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதில் சில மாற்றங்கள் செய்யப்பட்ட நிலையில், வரலாற்று சிறப்புமிக்க மசோதா நேற்று நிறைவேறியது. இதன் மூலம், அயர்லாந்தில் முதல் முறையாக கருக்கலைப்பு சட்டப்பூர்வமாக்கப்பட்டு உள்ளது.
அதிபர் மைக்கேல் டி ஹிகக்கின்சின் ஒப்புதலுக்காக இது அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவர் கையெழுத்திட்டதும் சட்டம் அமலுக்கு வரும். இந்திய வம்சாவளியை சேர்ந்த அந்நாட்டின் பிரதமர் லியோ வராத்கர் கூறுகையில், ‘‘அயர்லாந்து பெண்களுக்கு வரலாற்று சிறப்புமிக்க தருணம் இது’’ என்றார். இந்த சட்ட திருத்தத்தின் படி, 12 வார கருவை உரிய அனுமதியுடன் கலைக்கலாம்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி