மதுரை: மதுரை கஜா புயல் தாக்குதலால் கரும்பு விளைச்சல் பெரும் அளவு பாதிக்கப்பட்டிருப்பதால் வரும் பொங்கல் திருநாள் கசப்பாகவே அமையும் என வேதனை தெரிவித்துள்ளனர் விவசாயிகள். கரும்பு என்றதும் நினைவுக்கு வருவது பொங்கல் பண்டிகை. பொங்கல் பண்டிகையின் போது முக்கிய இடம் பெரும் தித்திக்கும் கரும்பு மதுரை மாவட்ட விவசாயிகளுக்கு தற்போது கசப்பாய் மாறியுள்ளது. மேலூர் பகுதியில் முல்லை பாசனம் விவசாயிகள் ஏராளமானோர் கரும்பு சாகுபடி செய்துள்ளனர். அறுவடைக்கு தயாராகி வந்த கரும்புகள் கஜா புயலால் சேதத்தை சந்தித்துள்ளன. ஒரு ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்ய ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு மேல் செலவு செய்வதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
கடந்த ஆண்டு ரூ.300கு விற்பனை ஆன ஒரு கட்டு கரும்பு நடப்பாண்டில் ரூ.250 ரூபாய்க்கு விற்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் கூறியுள்ளனர். கரும்பு விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.50,000 வரை இழப்பு ஏற்படும் சூழல் நிலவுவதாக வேதனை தெரிவித்துள்ளனர். இதனால் தங்களது அன்றாட வாழ்வின் தேவைகளுக்காக நிலத்தில் இறங்கி பணிபுரியும் கூலி தொழிலாளிகளும் பாதிக்கப்படுகின்றனர். வரும் பொங்கல் திருநாளை கொண்டாட புயலால் பாதிக்கப்பட்டுள்ள தங்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர் கரும்பு விவசாயிகள்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி