திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழாவின் நிறைவாக கடந்த மாதம் 23ம் தேதி 2,668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது. இதற்காக 3,500 கிலோ நெய் பயன்படுத்தப்பட்டது. தொடர்ந்து 11 நாட்கள் காட்சியளித்த மகாதீபம், கடந்த 3ம் தேதி இரவுடன் நிறைவடைந்தது. தீபமலையில் ஏற்றப்பட்ட மகா தீபத்தை தரிசிக்கவும், நெய் காணிக்கை செலுத்தவும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் மலைக்கு சென்றனர். மேலும், மகாதீபம் ஏற்றும் திருப்பணியை செய்தவர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டவர்கள் என பலரும் மலை மீது சென்றனர். மகாதீபம் ஏற்றப்படும் மலை, இறைவனின் திருமேனியாக வணங்கப்படுகிறது. அக்னி பிழம்பாக சிவபெருமான் காட்சியளித்த மலைக்கு, பக்தர்கள் செல்வது ஆன்மிக மரபு கிடையாது. எனவே, மகாதீபம் ஏற்றுவதற்காகவும், அதனை தரிசிப்பதற்காகவும் மலைமீது சென்றதற்கான பிராயசித்த வழிபாடு நேற்று நடந்தது. அதையொட்டி, அண்ணாமலையார் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட புனிதநீர், மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு காட்சிதரும் அண்ணாலையார் பாதம் மற்றும் மகாதீப கொப்பரை வைக்கப்படும் இடம் ஆகியவற்றில் புனித நீர் தெளித்து பிராயசித்த பூஜைகள் செய்யப்பட்டன.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி