டெல்லி : ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் தனது பதவியை ராஜினாமா செய்தது வங்கித்துறைக்கு மிகப்பெரிய இழப்பு என பிரதமர் நரேந்திர மோடி கருத்து தெரிவித்துள்ளார். ரகுராம் ராஜனுக்கு பிறகு உர்ஜித் படேல் 24வது கவர்னரானார். இவர் கென்யாவில் பிறந்தவர். இவரது பெற்றோர் குஜராத்தை சேர்ந்தவர்கள். கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 4ம் தேதி ரிசர்வ் வங்கி ஆளுநராக உர்ஜித் படேல் பதவி ஏற்று கொண்டார். உர்ஜித் படேலை மத்திய அரசு பதவியில் அமர்த்தியபோது, குஜராத்தை சேர்ந்தவர் என்பதால் இந்த பதவி கிடைத்ததாக விமர்சனங்கள் எழுந்தது. உபரியாக உள்ள பணம் தொடர்பாக மத்திய அரசு - ரிசர்வ் வங்கி இடையே கருத்து வேறுபாடு நீடித்து வந்தது. ரிசர்வ் வங்கியின் உபரி பணத்தை சந்தையில் திருப்பிவிட மத்திய அரசு கோரிக்கை விடுத்திருந்தது. இதற்கு மத்திய அரசின் கோரிக்கைக்கு ரிசர்வ் வங்கி எதிர்ப்பு தெரிவித்திருந்தது.
இந்நிலையில் சொந்த காரணங்களுக்காக தனது பதவியை ராஜினாமா செய்து கொள்வதாக உர்ஜித் படேல் அறிவித்துள்ளார். ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேலின் இந்த அறிவிப்பிற்கு பல்வேறு பிரதமர் மோடி, மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ரிசர்வ் வங்கியின் நிதி நிலையில் நிலைத்தன்மையை ஏற்படுத்தியவர் உர்ஜித் படேல் என்றும் வங்கிகளில் ஒழுங்கமைப்பை ஏற்படுத்தி அதனை உறுதியும் செய்தார் உர்ஜித் படேல் என்றும் ரிசர்வ் வங்கி துணை ஆளுநராகவும், ஆளுநராகவும் 6 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார் என்று பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.
ராஜினாமா எதிரொலி: கருத்துகளும் குற்றச்சாட்டுகளும்
* உர்ஜித் படேல் ராஜினாமா செய்ததற்கு இந்தியர்கள் அனைவரும் கவலைப்பட வேண்டும் என்று முன்னாள் ஆர்.பி.ஐ கவர்னர் ரகுராம்ராஜன் கூறியுள்ளார்.
* உர்ஜித் படேலின் ராஜினாமா வருத்தம் அளிக்கிறதே தவிர வியப்பளிக்கவில்லை என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
* உர்ஜித் படேலின் ராஜினாமா நாட்டின் பொருளாதாரத்துக்கு பாதகமாக அமையும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
* ரிசர்வ் வங்கி ஆளுநர் ராஜினாமா வியப்பளிக்கிறது; உர்ஜித் படேலை நாம் இழக்கிறோம் என ஆடிட்டர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.
* ரிசர்வ் வங்கியின் தன்னாட்சி அதிகாரத்தை மத்திய அரசு சீர்குலைத்து விட்டது என்று யஷ்வந்த் சின்ஹா குற்றச்சாட்டியுள்ளார்.
* ரிசர்வ் வங்கி ஆளுநர் ராஜினாமாவால் சர்வதேச அளவில் இந்தியாவின் மதிப்பில் பாதிப்பு ஏற்படும் என்று பொருளாதார பேராசிரியர் ஜோதி சிவஞானம் கருத்து தெரிவித்துள்ளார்.
* உர்ஜித் படேலின் ராஜினாமா எதிர்பார்த்த ஒன்றுதான் என்றும் இதனால் இந்திய ரூபாயின் மதிப்பு சரிய வாய்ப்பு இருக்கிறது என முன்னாள் எம்.பி. சுதர்சன நாச்சியப்பன் கருத்து தெரிவித்துள்ளார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி