சென்னை : தமிழக பள்ளிக்கல்வித்துறை கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிக்கல்வியில் பல்வேறு அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது. சிபிஎஸ்இக்கு இணையான பாடத்திட்டம், அரசுப்பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி, ஸ்மார்ட் வகுப்பறைகள், பாடப்புத்தகங்களில் கியூஆர் கோடு மற்றும் பார்கோடு இணைத்து பாடங்கள் வடிவமைப்பு என்று அடுத்தடுத்து பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தமிழகத்தில் 6 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் இணையதளம் மற்றும் வைபை வசதியுடன் ரூ.462 கோடி செலவில் கணினி ஆய்வகங்கள் அமைக்க திட்டமிட்டனர். இதற்கான டெண்டரும் விடப்பட்டது.
இதனை தொடர்ந்து கணினி ஆய்வகங்கள் அமைக்க ஒப்பந்த புள்ளிக்கோரிய அறிவிப்பாணையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மேலும் ரூ.50 கோடிக்கு மேலான டெண்டரை வர்த்தக இதழிலும் வெளியிட வேண்டும் என்பதை பின்பற்றவில்லை என மனுதாரர் குற்றம் சாட்டியிருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், கணினி ஆய்வகங்கள் அமைப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை பதில்தர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு பாடநூல் கழகமும் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜனவரி 8ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி