நியூயார்க்: ஜெர்மனி நாட்டை சேர்ந்த நோபல் பரிசு பெற்ற இயற்பியல் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் எழுதிய கடிதம் ஒன்று தற்போது ரூ.20 கோடிக்கு மேல் ஏலம் போயுள்ளது. ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கடந்த 1954-ம் ஆண்டு தனது 74-வது வயதில் ஜெர்மனியை சேர்ந்த தத்துவ அறிஞர் எரிக் குட்கைன்ட் (Eric Gutkind) என்பவருக்கு, அறிவியலுக்கும், மதத்துக்கும் இடையேயான விவாத பொருளை மையமாக கொண்டு ஒரு கடிதம் எழுதினார். இதனால் இக்கடிதத்தினை ‘கடவுள் கடிதம்’ (God Letter) என அழைக்கப்படுகிறது.
இந்த கடிதமானது தற்போது நியூயார்க்கின் கிறிஸ்டி ஏல மையத்தில் ஏலம் விடப்பட்டது. இந்த கடிதத்தை வாங்குவதற்காக ஆன்லைனில் ஏராளமானோர் கடும் போட்டியிட்டனர். இறுதியில் ஒன்றரை பக்கம் கொண்ட அந்த கடிதம் 3 மில்லியன் டாலருக்கு (இந்திய ரூபாயில் ரூ.20,39,06,787) ஏலம் போனது. இந்த கடிதம் எதிர்ப்பார்த்ததை விட இருமடங்கு வரை ஏலம் போனதாக கிறிஸ்டி ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கடிதங்கள் பல ஏற்கனவே ஏலம் விடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி