×

திருச்சியில் மணமகள் அதிகம் படித்திருந்ததால் மனமுடைந்த மணமகன் தற்கொலை : இருவீட்டார் சோகம்

திருச்சி: திருச்சியில் மணமகன் தற்கொலை செய்துகொண்டதால் நேற்று நடக்கவிருந்த திருமணம் நிறுத்தப்பட்டது. இதனால் இருவீட்டார்கள் சோகத்திற்குள்ளாகினர். திருச்சி மலைக்கோட்டை சறுக்குபாறையை சேர்ந்த சந்தானம் மகன் தினேஷ்(30), தனியார் லிப்ட் நிறுவனத்தில் சூப்பர்வைசராக வேலை செய்து வந்தார். இவர் 10ம் வகுப்பு வரை படித்துள்ளார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த உறவுக்கார பெண் புவனேஸ்வரிக்கும் (26) திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர் பட்டப்படிப்பு படித்துள்ளார். இவர்களுக்கு நேற்று காலை திருமணம் நடைபெற இருந்தது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சி சிந்தாமணி அன்னதான சத்திரத்தில் நடந்தன. வரவேற்பு முடிந்ததும் வீட்டுக்கு சென்ற  தினேஷ் வீட்டு மாடியில் தூங்குவதாக கூறி சென்றார். சிறிது நேரம் கழித்து தினேஷின் தாயார் மாடிக்கு சென்றார். கதவு பூட்டிக்கிடந்தது. இதில் சந்தேகமடைந்த தினேஷின் தாயார் உறவினர்களுடன் கதவை உடைத்து பார்த்த போது அதிர்ச்சி அடைந்தார். அறைக்குள் தினேஷ் தூக்கில் சடலமாக தொங்கினார்.

இதையடுத்து நேற்று காலை நடைபெற வேண்டிய திருமணம் நிறுத்தப்பட்டது. இதையடுத்து மணமகள் மற்றும் இருதரப்பு வீட்டாரும் சோகத்தில் ஆழ்ந்தனர். தினேஷ் மற்றொரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும், தற்போது பார்த்துள்ள பெண் தன்னை விட அதிகம் படித்தவர் என்பதாலும், இந்த திருமணத்தில் அவருக்கு விருப்பமில்லை என்றும் தெரிகிறது. இதுவே அவரது தற்கொலைக்கு காரணம் என போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது குறித்து கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : bridegroom ,Tiruchi , Trichy, groom, suicide
× RELATED திருச்சி எ.புதூரில் பைக் திருடன் கைது