மெக்சிகோ சிட்டி: மெக்சிகோ நாட்டின் புதிய அதிபராக ஆண்ட்ரேஸ் மனுவேல் லோபஸ் நேற்று முன்தினம் பதவியேற்றுக் கொண்டார். மெக்சிகோவில் கடந்த ஜூலையில் நாட்டின் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது. ஐஆர்பி கட்சியை சேர்ந்த அப்போதைய அதிபராக இருந்த பெனா நொய்டாவை எதிர்த்து இடதுசாரி கட்சியை சேர்ந்த ஆண்ட்ரேஸ் மனுவேல் லோபஸ் போட்டியிட்டார். தேர்தலில் அப்போதைய அரசினால் நாட்டில் நிகழும் குற்றங்கள், வறுமை, ஊழல் உள்ளிட்டவற்றை விமர்சித்தும் அவற்றுக்கு எதிராக புதிய அணுகுமுறை கையாளப்படும் என்றும் லோபஸ் பிரசாரம் மேற்கொண்டார்.
இந்த தேர்தலில் 53 சதவீத வாக்குகளை பெற்று அவர் வெற்றியும் பெற்றார். இதன் மூலம், 89 ஆண்டுகளாக மெக்சிகோவை ஆண்டசி இரு பிரதான கட்சிகளை அவர் தோற்கடித்தார். இதைத் தொடர்ந்து, புதிய அதிபராக லோபஸ் நேற்று முன்தினம் பதவியேற்றுக் கொண்டார். பின்னர், பொதுமக்களிடையே அவர் பேசுகையில், ‘‘இது புதிய அரசாங்கத்தின் தொடக்கமல்ல. அரசியல் அதிகாரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம். பொய் சொல்ல மாட்டேன், வஞ்சிக்க மாட்டேன், துரோகம் செய்யமாட்டேன் என்ற வாக்குறுதியை மீண்டும் மெக்சிகோ மக்களிடம் தெரிவித்து கொள்கிறேன். அதிபருக்கான விமானம், அதிபர் வசிக்கும் வீடு, அதிபருக்கான பாதுகாப்பு உள்ளிட்டவை ஏற்க மாட்டேன். அதிபருக்கான ஊதியம் 60 சதவீதமாக குறைக்கப்படுகிறது. அதிபருக்கான இல்லம் கலாசார மையமாக பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்படும்’’ என்றார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி