×

மார்த்தாண்டத்தில் சாலைகளை சீரமைக்க கோரிக்கை

மார்த்தாண்டம்: மார்த்தாண்டம் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் நடமாட முடியாத நிலை உள்ளது. பல இடங்களில் வடிகால்களில் அடைப்பு ஏற்பட்டு மழைநீர் மற்றும் கழிவுநீர் தேங்கிஉள்ளது. மேலும் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள பல பள்ளங்களிலும், பில்லர்களுக்காக தோண்டப்பட்ட குழிகள் சரிவர மூடப்படாமல் உள்ள பகுதிகளிலும் மழைநீர் தேங்கி நிற்கிறது. தற்போது வடகிழக்கு பருவ மழை அவ்வப்போது பெய்து வருகிறது. பால வேலையால் ஏற்கனவே சகதிக்காடாக விளங்கி வரும் மார்த்தாண்டம் மழையால் உழுதுபோட்ட வயல்போல காட்சியளிக்கிறது. சேறும், சகதியுமாக காணப்படும் இடங்களில் வாகனங்களில் செல்வோர் ‘கரணம் தப்பினால் மரணம்’ என்ற நிலையில் பயணித்து வருகின்றனர். டூ-வீலர்களில் வருவோர் தரையில் கால்வைக்க முடியாத நிலை உள்ளது.

மேலும் இவர்கள் தவறி விழுந்தால் ஆள் அடையாளம் தெரியாத அளவில் சகதி குளியல்தான். இப்பகுதியில் நடந்துகூட செல்ல முடியாத நிலையில் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். இதுகுறித்து மார்த்தாண்டம் தொழில் வர்த்தக சங்க தலைவர் அல் அமீன்  கூறுகையில், பால வேலையால் இப்பகுதி சாலைகள் சிதைந்து விட்டன. போக்குவரத்துக்கும், பொதுமக்கள் நடமாடவும் மிகவும் சிரமமாக உள்ளது. மேலும் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு கடந்த இரண்டரை ஆண்டுகளாக வியாபாரிகள் கடும் இன்னலை சந்தித்து வருகின்றனர். பல நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன. வியாபாரிகள் தங்கள் வாழ்க்கையை நடத்த முடியாமல் திணறி வருகின்றனர்.
 
பலர் தாங்கள் பெற்ற வங்கி கடன்களை திருப்பி செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே பாலத்தின் கீழ்ப்பகுதி சாலைகளையும் உடனடியாக சீரமைக்க வேண்டும்.மேம்பாலம் திறக்கும்போது இலகுவான போக்குவரத்துக்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும். மேலும் பால வேலைகளால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை வியாபாரிகளின் கடன்களையும் ரத்து செய்ய வேண்டும் என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : roads , Marthandam, road, demand to be renovated
× RELATED சாலை விரிவாக்க பணிக்காக மரங்கள்...