சென்னை: அனைத்து காவல் நிலையங்களிலும் இலவச வைபை வசதிகள் வழங்குவதற்காக பணிகள் விரைவாக நடந்து வருவதாக தமிழக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சந்தோஷ் பாபு தெரிவித்துள்ளார். சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உலக கணினி பாதுகாப்பு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், தமிழக தகவல் தொழில்நுட்ப செயலாளர் சந்தோஷ் பாபு, உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி பாஷா, இந்திய சைபர் பாதுகாப்பு அமைப்பு தலைவர் பாலு சாமிநாதன், மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் செந்தில்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தமிழக தகவல் தொழில்நுட்ப செயலாளர் சந்தோஷ் பாபு பேசியதாவது: அனைத்து காவல் நிலையங்கள், சுகாதார நிலையங்கள், பேருந்து நிலையங்களில் கம்பி இல்லா இலவச இணைய சேவை வழங்கும் வகையில் தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு இணையதள சேவைக்கான கேபிள்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. வரும் ஆண்டில் தலைமை செயலகம் மற்றும் காவல்துறை இயக்குநர் அலுவலகத்தில் அனைத்தும் இணைய சேவை முறையில் பணிகள் நடைபெறுவதற்கான வேலைகள் தற்போது நடந்து வருகிறது. விரைவில் இந்த நடைமுறை அமலுக்கு வரும் என்றார்.
போலீஸ் கமிஷனர் ஏ.ேக.விஸ்வநாதன் பேசியதாவது: இணையதள வளர்ச்சியால் சைபர் குற்றங்களும் அதிகரித்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் பிரிவுக்கு 10,259 புகார்கள் வந்துள்ளது. அதில் 399 புகார்கள் முறையாக விசாரிக்கப்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மேலும் பல வழக்குகள் விசாரணை முடியும் நிலையில் உள்ளது. சென்னை காவல் துறையில் சைபர் க்ரைம் பிரிவு சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி தருகின்றனர். பொது மக்களிடம் சைபர் குற்றங்கள் குறித்து ஏற்படுத்திய விழிப்புணர்வால் புகார்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி