விருதுநகர்: திமுகவுடன் 2 ஆண்டுக்கும் மேலாக தோழமையுடன் இருக்கிறோம், இது கூட்டணியாக மாற வேண்டும் என்பது எங்கள் விருப்பம் என்று விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் நேற்று நடந்த தி௫மணத்தில் கலந்து கொள்ள வந்த விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விருதுநகரில் அளித்த பேட்டி: விருதுநகர் மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை விடுதிகளில் முறைப்படி பணிநியமனம் பெற்று, 2 ஆண்டாக பணிபுரிந்த துப்புரவு பணியாளர்கள் மற்றும் சமையலர்கள் 46 பேரை பணிநீக்கம் செய்தது கண்டிக்கத்தக்கது. அவர்களை மீண்டும் பணியில் சேர்க்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டாசு தொழிலுக்கு உச்சநீதிமன்றம் விதித்த கட்டுப்பாடு காரணமாக, அதனை நம்பியுள்ள 8 லட்சம் தொழிலாளர் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. இதில், மத்திய அரசு தலையிட்டு அவர்களை பாதுகாக்க வேண்டும். தமிழகத்தில் கடந்த காலங்களில் ஏற்பட்ட புயல் சேதாரங்களுக்கான நிவாரண நிதியை மத்திய அரசு முழுமையாக வழங்கியதில்லை.
கஜா புயலால் ரூ.15 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என தமிழக அரசு கணக்கிட்டுள்ளது. இந்த நிதியை முழுமையாக வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், புயலால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கு கூடுதல் நிதி வழங்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் குழந்தைகளை காக்க தவறியதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்த கருத்து உண்மைதான். இவ்வாறு அவர் கூறினார். சிவகாசியில் திருமாவளவன் கூறுகையில், ‘‘திமுகவுடனான உறவில் எந்த இடைவெளியும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக திமுகவுடன் தோழமைக் கட்சியாக இருந்து வருகிறோம். இது கூட்டணியாக மாற வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். இடைத்தேர்தல் அறிவித்த பிறகு, விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் நிலைப்பாடு அறிவிக்கப்படும்,’’ என்றார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி