சென்னை: 30 டாஸ்மாக் சங்கத்தின் உண்ணாவிரத ஆர்ப்பாட்டம் டிசம்பர் 18ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் அறிவித்துள்ளது. இதுகுறித்து, சங்கத்தின் மாநில தலைவர்பால்பாண்டியன் கூறியதாவது:பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் மற்றும் அரசு பணியாளர்களுக்கு இணையான படிகள் வழங்க வேண்டும். ஓய்வூதியம் குறைந்தபட்சம் ரூ.5 ஆயிரமாக வழங்க வேண்டும். டாஸ்மாக் நிர்வாகத்தில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், எழுத்தர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு டாஸ்மாக் பணியாளர்களை சீனியாரிட்டி அடிப்படையில் பணியமர்த்த வேண்டும் உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கையை வலியுறுத்த பல கட்டங்களாக போராட்டத்தை நடத்தினோம். இந்நிலையில், இதே கோரிக்கைகளை வலியுறுத்தி 5 மண்டலங்களிலும் இன்று முதல் வரும் 30ம் தேதி வரையில் குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டத்தை நடத்த உள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்தோம்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்டா மாவட்டங்களை கஜா புயல் கடுமையாக தாக்கியது. இதனால், லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கின்றனர். இவர்களுக்கு உதவும் வகையில் தங்களின் ஒரு நாள் ஊதியத்தை பிடித்தம் செய்துகொள்ள பணியாளர் சங்கம் தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்திருந்தது. இதேபோல், மக்களின் நிலையை கருத்தில் கொண்டு ஊழியர்கள் பலர் அங்கு நிவாரண பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள். எனவே, இன்று முதல் வரும் 30ம் தேதி வரை 5 மண்டலங்களில் குடும்பத்துடன் நடைபெற இருந்த உண்ணாவிரத போராட்டம் வரும் டிசம்பர் மாதம் 18ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. அன்றைய தேதியில் 5 மண்டலங்களிலும் ஒன்றாகவே உண்ணாவிரத போராட்டம் நடைபெறும்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி