சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் நேற்று மாலை டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: தமிழகத்தில் புயலால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட 6 மாவட்டங்களில் ஆய்வு செய்தவற்காக மத்திய குழு, ஒரு வாரத்துக்கு பிறகுதான், தாமதமாக தமிழகம் வந்துள்ளது. ஆனால் பிரதமர் மோடி அல்லது பாஜ மூத்த தலைவர் அமித்ஷா போன்றவர்கள் பாதிப்புகளை பார்வையிட வராதது, அவர்கள் தமிழகத்தை புறக்கணிப்பதை காட்டுகிறது. தேசிய பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து, உடனடியாக ₹5 ஆயிரம் கோடியை கஜா புயல் நிவாரண நிதியாக மத்திய அரசு வழங்க வேண்டும்.
டெல்டா மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள மக்கள் நிவாரணம் கேட்டு போராடுகின்றனர். அதற்காக அவர்களை கைது செய்து, வழக்கு போடுவது சரியானதல்ல. அவர்கள் மீது போட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெற்று, கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும். புயல் பாதித்த பகுதிகளுக்கு நிவாரண பொருட்கள் இதுவரை முழுமையாக சென்றடையவில்லை. முக்கிய பிரதான குடியிருப்பு பகுதிகளுக்கு மட்டும் செல்கின்றன. சிறிய குக்கிராமத்தில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ள மக்களுக்கு இதுவரை நிவாரண உதவி முறையாக போய் சேரவில்லை. இதேபோல் மீட்பு பணிகளும், இன்னும் முழு வீச்சில் நடக்கவில்லை. தமிழக அரசு மெத்தனமாக செயல்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி