சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியாக ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த வினித்கோத்தாரி நேற்று பதவியேற்றார். அவருக்கு தலைமை நீதிபதி தாஹில் ரமானி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 75 ஆகும். தற்போது, உயர்நீதிமன்றத்தில், 60 நீதிபதிகள் உள்ளனர். 15 இடங்கள் காலியாக உள்ளன. சமீபத்தில் உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி குலுவாடி ஜி.ரமேஷ் மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். இதையடுத்து இந்த பணியிடத்திற்கு, தற்போது கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவி வகிக்கும், வினித் கோத்தாரியை நியமனம் செய்து ஜனாதிபதி ஆணை வெளியிட்டார். இதையடுத்து வினித்கோத்தாரி நேற்று நீதிபதியாக பதவியேற்றார். அவருக்கு தலைமை நீதிபதி தாஹில் ரமானி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
முன்னதாக நீதிபதி வினித் கோத்தாரியை வரவேற்று அட்வகேட் ஜெனரல், விஜய் நாராயணன் பேசினார். இந்நிகழ்ச்சியில், உயர் நீதிமன்ற நீதிபதிகள், வக்கீல்கள் சங்க பிரதிநிதிகள், மூத்த வக்கீல்கள், புதிய நீதிபதியின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். நீதிபதி வினித் கோத்தாரி, ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர். கடந்த 1984ம் ஆண்டு சட்டப்படிப்பை முடித்து ராஜஸ்தான் பார்கவுன்சிலில் பதிவு செய்தார்.சுமார், 20 ஆண்டுகள் ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் வழக்குகளில் ஆஜரான இவர், 2005 ஜூன், 13ம் தேதி ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அதன்பிறகு 2016 ஏப்ரல் 18ல் கர்நாடகா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார்.இவர் அரசியல் அமைப்பு சட்டம், நிறுவனங்கள் சட்டம் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றவர். சட்டப் படிப்பில் டாக்டர் பட்டம் பெற்றவர். வினித் கோத்தாரி பதவியேற்றதையடுத்து உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது.
பதிவியேற்றபின் வினித் கோத்தாரி பேசும்போது, இந்தியாவின் மிகப் பழமையான நீதிமன்றங்களில் ஒன்றான சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்த நீதிமன்றம் 3 தலைமை நீதிபதிகளையும் 20 நீதிபதிகளையும் உச்ச நீதிமன்றத்திற்கு தந்துள்ளது. தாமதிக்கப்பட்ட நீதி என்ற நிலை இருக்கக்கூடாது. அதற்காக வக்கீல்கள் நீதிபதிகளுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்றார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி