மரக்காணம்: விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மத்திய, மாநில அரசுகளுக்கு சொந்தமான சுமார் 3ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவில் உப்பளங்கள் உள்ளன. இதில் இருந்து ஆண்டுக்கு சுமார் 25 லட்சம் உப்பு மூட்டைகள் உற்பத்தி செய்து புதுவை, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்துவருகின்றனர். இந்த தொழிலை நம்பி இப்பகுதியில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் உள்ளனர். இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக வட கிழக்கு பருவ மழை காலதாமதமாக துவங்கியது. இப்பகுதியில் பருவ மழை துவங்கியது முதல் விட்டு, விட்டு பரவலாக மழை பெய்து வந்தது. மேலும் கஜா புயலின் தாக்கத்தினால் இங்கு இரண்டு நாட்கள் கன மழை பெய்தது.
இந்நிலையில் தற்போது வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள புயல் சின்னத்தின் காரணமாக. இப்பகுதியில் தொடர்ந்து கன மழைபெய்து வருவதால் உப்பளங்களில் மழை நீர் ஏரி போல் தேங்கி உள்ளது. இதனால் உப்பு உற்பத்தி முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது. உப்பளங்கள் மழை நீரில் மூழ்கியதால் மேடான இடத்தில் அம்பாரமாக சேமித்துவைத்து இருந்த உப்பை லாரி மூலம் வெளியிடங்களுக்கு ஏற்றுமதி செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இங்கு உப்பு உற்பத்தி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதால் இதனை நம்பி இருந்த சுமார் 2 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். கனமழையால் பாதிக்கப்பட்ட உப்பள தொழிலாளர்களுக்கு மழைக் கால நிவாரணம் வழங்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று உப்பள கூலி தொழிலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி