சென்னை: கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்கொடைகள் மூலம் உதவிட வேண்டும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். வாழ்வாதாரங்களை இழந்த மக்களின் நிலைமையை சரிசெய்யவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் அரசு எப்போதும் முன்னுரிமை அளிப்பதாக தமிழக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் குடிமக்கள், நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் நன்கொடையாளர்கள் ஆகியோர் தமிழக அரசு எடுத்து வரும் மாபெரும் நிவாரணம் மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு நன்கொடைகள் மூலம் உதவிட வேண்டும் என்று முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார். நிதி அளிக்க விரும்புவோருக்கான இணையதள முகவரியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதில் பொதுமக்கள் தங்களது பங்களிப்புகளை குறுக்கு கோடிட்ட காசோலை அல்லது வங்கி வரைவோலை மூலமாக, அரசு துணை செயலாளர் மற்றும் பொருளாளர், முதலமைச்சர் பொது நிவாரண நிதி, நிதித்துறை, தமிழநாடு அரசு, தலைமை செயலகம், சென்னை-600009. என்ற முகவரிக்கும் அனுப்பி வைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தலைமைச் செயலக கிளைக்கும் நேரடியாக அனுப்பி வைக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான வங்கி கணக்கு எண் போன்ற விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன. இசிஎஸ் மூலம் நிதி அனுப்புவோர் உரிய அலுவலக பற்று சீட்டினை பெற எதுவாக பெயர், செலுத்தும் தொகை, வங்கியின் பெயர், செலுத்தப்பட்ட தேதி, நிதி அனுப்பியதற்கான எண்,முகவரி மற்றும் ஈமெயில் போன்ற விவரங்களை குறிப்பிடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அவ்வாறு அனுப்பப்படும் நன்கொடைகளுக்கு உரிய ரசீதுகள் அனுப்பிவைக்கப்படும் என்றும் நன்கொடையாளர்களுக்கு 100% வரிவிலக்கு உண்டு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி