சென்னை: கஜா புயலால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் மறு உத்தரவு வரும் வரை டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு டெல்டா மாவட்டங்களை கஜா புயல் கடுமையாக தாக்கியது. இதனால், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிப்படைந்தது. கஜா புயல் காரணமாக இதுவரையில் 50க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். இதேபோல், தென்னை, வாழை என லட்சக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தது. இதேபோல், புயல் பாதித்த பகுதிகளில் உணவு, தண்ணீர், பால், போன்றவை கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதற்காக அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், புயல் பாதித்த சில இடங்களில் மது கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன. இது பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டங்களையும் நடத்தினர். இந்நிலையில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் புதுக்கோட்டை ஆகிய 4 டெல்டா மாவட்டங்களில் மறு உத்தரவு வரும் வரை மதுக்கடைகளை மூட டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, டாஸ்மாக் எம்.டி. கிர்லோஷ் குமார் தெரிவித்துள்ள தகவல்: கஜா புயலின் காரணமாக கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ள தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்டங்களில் மறு உத்தரவு வரும் வரை டாஸ்மாக் மதுக்கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலாண்மை இயக்குனரின் உத்தரவையடுத்து 4 மாவட்டங்களிலும் 500க்கும் மேற்பட்ட மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி