சென்னை: ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக புத்தகம் எழுதி வெளியிட்டதாக தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், 2002ல் கைது செய்யப்பட்டார். அவர் வெளியிட்ட புத்தகங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்நிலையில், பழ.நெடுமாறன் மீதான வழக்கை அரசு 2006ல் வாபஸ் பெற்றதால் அவர் விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில், பறிமுதல் செய்த புத்தகங்களை திரும்பத் தரக் கோரி பழ.நெடுமாறன் சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் மனு செய்தார் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் பழ.நெடுமாறன் வழக்கு தொடர்ந்தார். வழக்கு நீதிபதி எம்.வி.முரளிதரன் முன்பு விசாரணைக்கு வந்தது. பழ.நெடுமாறன் தரப்பில் ஆஜரான வக்கீல், வெளிநாடுகளுக்கு இந்த புத்தகங்களை ஏற்றுமதி செய்ய வேண்டும். வழக்கு வாபஸ் பெறப்பட்டுவிட்டது. எனவே இந்த புத்தகங்களை காவல் துறையினர் பாதுகாப்பில் வைத்திருப்பதால் எந்த பயனும் இல்லை என வாதிடப்பட்டது. மேலும், இந்த மனுவை ஏற்கனவே கீழமை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததாக, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை தள்ளிவைத்திருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிபதி முரளிதரன், தமிழ் ஈழத்துக்கு ஆதரவாக தமிழ் ஈழம் சிவக்கிறது என்ற பெயரில் பழ.நெடுமாறன் எழுதிய புத்தகத்தை திருப்பி வழங்க முடியாது. மேலும் சட்ட நடைமுறைகளை பின்பற்றி புத்தகங்களை அழிக்க வேண்டும் என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி