×

அனைத்து தரப்பினரும் நாலாயிர திவ்விய பிரபந்தம் பாட அனுமதிக்கக்கோரி போராட்டம்

சென்னை: பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் நாலாயிர திவ்விய பிரபந்தம் பாடுவதில்  பாகுபாடு இன்றி பிராமணர் அல்லாதவர்களையும் அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்தியும், இந்து அறநிலைத் துறை ஆணையர் உத்தரவை நடைமுறைப்படுத்த வலியுறுத்தியும், திருக்கச்சி நம்பி திருமாலடியார்  சேவை சங்கமும், தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் நேற்று வரதராஜ பெருமாள் கோயில் எதிரில்  தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். வரதராஜ பெருமாள் கோயிலில் உள்ள  மணவாள மாமுனிகள் சன்னதி உட்பிரகாரத்தில் பிராமணர்கள் மட்டுமே நாலாயிர திவ்விய பிரபந்தம் பாட அனுமதிக்கப்படுகிறது. பிராமணர் அல்லாத வைணவர்கள் சன்னதி வெளியில் இருந்தே பிரபந்தம் பாடமுடியும். இந்த பாகுபாட்டை நீக்க வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி கடந்த நவ.9ம் தேதி வைணவர்கள்  கலெக்டர் அலுவலக வாயிலில் தரையில் அமர்ந்து நாலாயிர திவ்விய பிரபந்தம் பாடினர். இதனைத் தொடர்ந்து நேற்று வரதராஜ பெருமாள் கோயில் எதிரில் வைணவர்கள் பாகுபாடு இல்லாமல் அனைவரையும் நாலாயிர திவ்விய பிரபந்தம் பாட அனுமதிக்க வலியுறுத்தி தரையில் அமர்ந்து நாலாயிர திவ்விய பிரபந்தம் பாடினர்.

மதியம் 1.45 மணியளவில் பாட ஆரம்பித்த வைணவர்கள் மாலை 4.45 மணி வரை சுமார் 3 மணி நேரம் பாடினர். இதனை முன்னிட்டு விஷ்ணுகாஞ்சி இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு தலைமையில் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். இதனால் கோயில் அருகே சுமார் 3 மணி நேரத்திற்கும் மேல் பரபரப்பான சூழல் நிலவியது. இதுகுறித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட தலைவர் பாரதி அண்ணா கூறும்போது, சென்னை  இந்து சமயத்  அறநிலைதுறை ஆணையர் உத்தரவிட்டதை நடைமுறைப்படுத்த வேண்டும். கோவிலின் நிர்வாக அலுவலர், மாவட்ட நிர்வாகம் கூறியபடி பிரசாதம், சடாரி பெற்றுக் கொள்ளலாம். பிரபந்தம் பாடுவதற்கு வாய்ப்பில்லை எனக்கூறி ஆணையர் உத்தரவை தட்டிக் கழிக்கின்றனர். காவல்துறையும் உயர் நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தவில்லை .ஆகவே வழக்கம் போல மணவாள மாமுனிகள் சன்னதியில் வெளியில் அமர்ந்து திவ்விய பிரபந்தம் பாட வேண்டிய அவலநிலை ஏற்பட்டது என்று தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : parties ,Ezhava Kanthi , struggle,
× RELATED ஆந்திர மாநில தேர்தலில் ஒய்.எஸ்.ஆர்....