×

பேராசிரியர் பதவி உயர்வு கூடுதல் தகுதி தீர்மானம்: அண்ணா பல்கலை சிண்டிகேட் முடிவுக்கு தடை: உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பதவி உயர்வு பெற, இணை பேராசிரியர், முனைவர் பட்டம் பெற்ற மாணவருக்கு வழிகாட்டியாக இருந்திருக்க வேண்டும். இணை பேராசிரியர் பதவி உயர்வு பெற, உதவி பேராசிரியர், முனைவர் படிப்பு மேற்கொள்ளும் மாணவருக்கு மேற்பார்வையாளராக இருக்க வேண்டும் என்ற கூடுதல் தகுதிகளை நிர்ணயித்து 2018ம் ஆண்டு பல்கலைக்கழக சிண்டிகேட் தீர்மானம் நிறைவேற்றியது. இந்த தீர்மானத்தை ரத்து செய்யக் கோரி பதவி உயர்வு பெற விண்ணப்பித்து நேர்முக தேர்வில் கலந்து கொண்ட கணபதி மலர்விழி உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த மனுக்களில், பதவி உயர்வுக்கான தேர்வு நடைமுறைகள் 2017ம் ஆண்டு முடிவடைந்து விட்ட நிலையில், 2018ம் ஆண்டு நிறைவேற்றிய தீர்மானத்தின் அடிப்படையில் தங்களுக்கு பதவி உயர்வு மறுக்கக் கூடாது என தெரிவித்திருந்தனர்.ஆனால், கூடுதல் கல்வித் தகுதியை நிர்ணயிக்க பல்கலைக்கழகத்துக்கு அதிகாரம் உள்ளதாக, அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் ஐசக்மோகன்லால் ஆஜராகி எதிர்ப்பு தெரிவித்து வாதிட்டார். வழக்குகளை விசாரித்த நீதிபதி பார்த்திபன், கூடுதல் கல்வித் தகுதியை முன் தேதியிட்டு அமல்படுத்த முடியாது என உத்தரவிட்டார். மேலும், தீர்மானம் நிறைவேற்றப்படும் முன் பதவி உயர்வுக்கான தேர்வு நடைமுறைகளில் கலந்து கொண்டவர்களுக்கு, அப்போது நடைமுறையில் இருந்த தகுதியின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்கி, நான்கு வாரங்களில் உத்தரவு பிறப்பிக்க அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிட்டார்….

The post பேராசிரியர் பதவி உயர்வு கூடுதல் தகுதி தீர்மானம்: அண்ணா பல்கலை சிண்டிகேட் முடிவுக்கு தடை: உயர்நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Anna University ,Chennai ,Anna University Syndicate ,Dinakaran ,
× RELATED பி.எப்.நிதி பாக்கி உத்தரவுக்கு எதிராக அண்ணா பல்கலை. மேல்முறையீடு