ஆலந்தூர்: பெண் ராணுவ அதிகாரியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ராணுவ வீரருக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். திண்டுக்கல்லை சேர்ந்தவர் பிரகாஷ் (36). ராணுவ வீரரான இவர், சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள ராணுவ மருத்துவமனையில் பிசியோதெரபி பிரிவில் உள்ள டாக்டரிடம் உதவியாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், பரங்கிமலையில் உள்ள ராணுவ பயிற்சி மைய பெண் பயிற்சி அதிகாரி, கடந்த 2015 ஏப். 13ம் தேதி, இந்த ராணுவ மருத்துவமனையில் உள்ள பிசியோதெரபி சிகிச்சைக்காக வந்தார்.
அவருக்கு, பிரகாஷ் சிகிச்சை அளித்தபோது, சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் பெண் அதிகாரி அதிர்ச்சியடைந்தார். உடனே இதுகுறித்து, ராணுவ உயரதிகாரிகளிடம் புகார் செய்தார். விசாரணையில், பிரகாஷ், சில்மிஷம் செய்தது உறுதியானது. இது பற்றிய அறிக்ைக, பரங்கிமலையில் உள்ள ராணுவ தீர்ப்பாயத்திடம் ஒப்படைக்கப்பட்டு, வழக்கு 3 ஆண்டுகளாக நடந்து வந்தது. கடந்த ஜூன் மாதம் 2ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதில், பிரகாஷுக்கு 2 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ராணுவத்தில் இருந்து பணிநீக்கம் செய்யவும் உத்தரவிடப்பட்டது.
இதைத்தொடர்ந்து தென்மண்டல ராணுவ கமாண்டர் உத்தரவின்பேரில், நந்தம்பாக்கத்தில் உள்ள ராணுவ மருத்துவமனை முதன்மை பதிவாளர் கர்ணல் ஜேக்கப் என்பவர், ராணுவ வீரர் பிரகாஷை பணிநீக்கம் செய்து 2 ஆண்டு கடுங்காவல் தண்டனை நிறைவேற்றுமாறு நந்தம்பாக்கம் போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து, இன்ஸ்பெக்டர் சிவகுமாரிடம் பிரகாஷ் ஒப்படைக்கப்பட்டார். பின்னர் வழக்கு பதிந்து பிரகாஷை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி