×

கூலிப்படையை ஏவி தம்பதி படுகொலை : கள்ளக்காதலனுடன் பெண் வெறிச்செயல்

திருப்பத்தூர்: வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த அங்கநாதவலசை கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம்(40), விவசாயி. இவரது மனைவி கலா(37). இவர்களுக்கு 1 மகன், 1 மகள் உள்ளனர். அதே பகுதியை சேர்ந்தவர் ஏகாம்பரம். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் சண்முகத்திற்கு நெருங்கிய நண்பர் என்பதால், அடிக்கடி அவரது வீட்டிற்கு சென்று வந்துள்ளார். அவ்வாறு வரும்போது ஏகாம்பரத்திற்கும், கலாவிற்கும் இடையே நட்பு ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் சண்முகத்திற்கு தெரியாமல் திருப்பத்தூர், ஏலகிரிமலை உள்பட பல்வேறு இடங்களில் சுற்றி வந்துள்ளனர். இதையறிந்த சண்முகம், கலாவை கண்டித்துள்ளார். இதனால் இவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

கடந்த ஓராண்டிற்கு முன்பு கலா, கணவரை பிரிந்து கள்ளக்காதலன் ஏகாம்பரத்துடன் கேரளாவிற்கு சென்றுவிட்டார். இதனால் சண்முகம் அதே பகுதியை சேர்ந்த சுஜாதா(25) என்ற பெண்ணை 2வது திருமணம் செய்து கொண்டார். திடீரென கடந்த 1 மாதத்திற்கு முன்பு கலா, ஏகாம்பரம் இருவரும் அங்கநாதவலசை கிராமத்திற்கு வந்தனர். அப்போது நடந்த ஊர் பஞ்சாயத்தில், கலா திருந்தி சண்முகத்துடன் வாழ்வதாக கூறியுள்ளார். இதனால் சண்முகம், கலாவை ஏற்றுக்கொண்டார். இதையடுத்து கலா, சுஜாதாவுடன் சண்முகம் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் இன்று காலை நீண்ட நேரமாகியும் சண்முகத்தின் வீடு திறக்கவில்லை.

இதனால் அக்கம்பக்கத்தில் உள்ள உறவினர்கள், அவரது வீட்டிற்கு சென்று பார்த்தபோது சுஜாதா, சண்முகம் இருவரும் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து திருப்பத்தூர் தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். கணவன், மனைவி இருவரையும் மரம் ஆசாமிகள் இரும்பு ராடால் சரமாரி தாக்கி கொலை செய்தது தெரியவந்தது. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், சண்முகத்தின் முதல் மனைவியான கலா திருந்திவிட்டதாக கூறி, சண்முகத்துடன் வாழ்ந்து வந்துள்ளார். இருப்பினும் கலா, தொடர்ந்து ஏகாம்பரத்துடன் கள்ளத்தொடர்பில் இருந்துள்ளார்.

தங்களது கள்ளக்காதலுக்கு சண்முகம், சுஜாதா இருவரும் இடையூறாக இருப்பதால், அவர்களை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். இதை கலா, கள்ளக்காதலன் ஏகாம்பரத்திடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து இருவரும் சேர்ந்து கூலிப்படையை ஏவி சண்முகம், சுஜாதா இருவரையும் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், 2 பேரின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள கலா, ஏகாம்பரம் மற்றும் கூலிப்படையை தேடி வருகின்றனர்.
முதல் மனைவி, கள்ளக்காதலனுடன் சேர்ந்து கூலிப்படையை ஏவி கணவனையும், அவரது 2வது மனைவியையும் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Woman murder couple ,mercenaries , Mercenary, Couples murder, paramour
× RELATED பொன்னேரியில் கள்ளக்காதலன் கொலை வழக்கில் கூலிப்படையை சேர்ந்த 3 பேர் கைது