சென்னை: சென்னையில் தொடர் செயின் பறிப்பு மற்றும் வழிப்பறிகளை தடுக்க சென்னை மாநகர காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை செய்து வருகிறது. அந்த வகையில் பெண்கள் மற்றும் முதியவர்கள் தனியாக நடந்து செல்லும் போது வழிப்பறி கொள்ளையர்கள் வழிமறித்து செயின்களை கொள்ளையடித்து செல்கின்றனர். இதுபோன்ற சமயங்களில் பாதிக்கப்பட்ட பெண்கள் உடனே காவல் துறையின் உதவியை கோர மாநகர காவல் துறை சார்பில் காவலன் எஸ்ஓஎஸ் ஆப் என்ற புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இந்த செயலியை ஆன்ராய்டு மற்றும் ஐ-போனில் பதிவேற்றம் செய்து கொள்ளலாம். இந்த ஆப் மூலம் அவசரத்தில் காவல் துறையை அழைக்க செல்போனில் பதிவிறக்கம் செய்துள்ள காவலன் எஸ்ஓஎஸ் ஆப் உள்ள பொத்தானை அழுத்தினால், அழைப்பவரின் இருப்பிடம் ஜிபிஎஸ் மூலம் அறியப்படும். அழைப்பவரை உடனடியாக அவர்களின் செல்போன் கேமரா தானாகவே 15 வினாடிகளில் ஒலி-ஒளியுடன் கூடிய வீடியோ எடுத்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பிவிடும். காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து அழைத்த நபரை அழைக்கவும் முடியும். அழைத்தவரை கண்காணிக்கும் வசதியும் இந்த ஆப்பில் உள்ளது.
அழைப்பவரின் இருப்பிட தகவல் மற்றும் வரைப்படம் இந்த செயலியில் பதிவு செய்துள்ளவர்களின் எண்களுக்கு தானாகவே பகிரப்படும். இந்த ஆப் ஆங்கிலம் மற்றும் தமிழ் என இரு மொழிகளில் இயங்கும் வசதி உள்ளது. இணைய இணைப்பு இல்லாத இடங்களிலும் கூட தானியங்கி எச்சரிக்கை மூலமாக செயல்படும். பெண்கள், முதியவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு 24 மணி நேரமும் பாதுகாப்பாக இந்த செயலி இருக்கும். எனவே, இந்த செயலியை தங்கள் செல்போன்களில் பதிவு ஏற்றம் செய்து பயன்படுத்திக் கொள்ளும் வகையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் எஸ்ஓஎஸ் ஆப் குறித்த முழுவிவரம் அடங்கிய 50 ஆயிரம் துண்டு பிரசுரம் சென்னை முழுவதும் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி