சென்னை: தென், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று முதல் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.வடகிழக்கு பருவமழை தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கடந்த 1ம் தேதி தொடங்கியது. அதன் பிறகு தமிழகத்தின் இதர பகுதிகளில் பருவமழை தொடங்கியது. அன்றைய தினம் முதல் தென்மாவட்டங்களில் பல இடங்களில் கனமழை மழை பெய்து வருகிறது. சென்னையை பொறுத்தவரை அவ்வப்போது லேசான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை திடீரென எழும்பூர், புரசைவாக்கம், சூளை, பெரம்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. தொடர்ந்து மாலை வரை வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. இதனால், குளிர்ச்சியான சீதோஷண நிலை உருவானது. இந்த நிலையில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் அளித்த பேட்டி:மாலத்தீவு முதல் தெற்கு கொங்கன் பகுதி வரை குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. மேலும் மாலத்தீவுகள் பகுதியில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சியும், அந்தமான் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையும் இருக்கிறது. இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்து இருக்கிறது. அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், வடதமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்யக்கூடும். தென், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகரை பொறுத்த வரையில் ஓரிரு முறை இடைவெளிவிட்டு லேசான மழை பெய்யும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகப்பட்சமாக மணிமுத்தாறில் 29 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. சாத்தான்குளத்தில் 22 செ.மீ., பாபநாசம் 16 செ.மீ, திருச்செந்தூர் 11 செ.மீ., தலா மழை பெய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
வெதர்மேன் டிவிட்டர் பதிவு
தமிழ்நாடு வெதர்மேன் தனது டிவிட்டர் பக்கத்தில், தென் தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக நெல்லை மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. முதல் முறையாக நெல்லையில் 286 மி.மீ. மழை பெய்துள்ளது. இந்த வடகிழக்கு பருவமழை காலத்தில் தென் தமிழகத்தில் அதிகபடியான மழையால் முதல் முறையாக 204.5 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இதனால் ரெட் அலர்ட் விடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி, தூத்துக்குடி, தேனி, நாகை, தஞ்சை மற்றும் திருவாரூர் ஆகிய இடங்களில் நல்ல மழை பெய்துள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி