சென்னை: ஜாக்டோ-ஜியோ அமைப்பில் இருந்து பிரிந்து சென்ற ‘கிராப்’ அமைப்பினர் மீண்டும் ஜாக்ேடா-ஜியோவில் இணைந்து செயல்பட இரு தரப்பினரும் பரஸ்பரம் அழைப்பு விடுத்துள்ளனர். இந்த இணைப்பு தொடர்பாக இரு தரப்பினரும் பேசி, நவம்பர் 10ம் தேதி முடிவு அறிவிக்கப்படும் என ஜாக்டோ-ஜியோ அறிவித்துள்ளது. ஜாக்டோ -ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. அனைத்து ஒருங்கிணைப்பாளர்கள், மற்றும் உயர்மட்டக் குழுவின் உறுப்பினர்கள் பங்கேற்றனர். காலை 11 மணிக்கு நடந்த ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்துக்கு பிறகு, மதியம் 2 மணி அளவில் மாநில உயர் மட்டக் குழு கூட்டம் மாலை வரை நடந்தது. நவம்பர் மாதம் 27ம் தேதி நடக்க இருக்கின்ற, தொடர் வேலை நிறுத்தப் போராட்டம், ஜாக்டோ-ஜியோ மற்றும் கிராப் இணைப்பு குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இது குறித்து ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் வெளியிட்ட அறிவிப்பு:ஜாக்டோ-ஜியோ சார்பில் நவம்பர் 27ம் தேதி நடத்த உள்ள காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை வலுவாக நடத்துவதற்காக தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிவித்துள்ள போராட்டத்தை வாபஸ் பெற வேண்டும். மேலும் இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதியக் குழுவால் அறிவிக்கப்பட்ட அநீதியை தனிக்கோரிக்கையாக பட்டியலிடப்படும்.
ஜாக்ேடா-ஜியோவில் இருந்து பிரிந்து சென்ற அமைப்புகளை இணைத்துக் கொள்ள இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதற்கான பேச்சுவார்த்தை மேற்கொள்ள 8 ஒருங்கிணைப்பாளர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவில் மீனாட்சி சுந்தரம், செ.முத்துசாமி, மாயவன், மோசஸ், சுப்பிரமணியன், தியாகராஜன், இரா.தாஸ், வெங்கடேசன் ஆகியோர் இடம் பெறுகின்றனர். இந்த குழுவினர், பிரிந்து சென்ற குழுவினரிடம் நவம்பர் 9ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தும். அதே நாளில் ஒருங்கிணைப்பாளர் கூட்டமும், 10ம் தேதி உயர்மட்டக் குழு கூட்டத்தை கூட்டுவோம். இந்நிலையில், ஜாக்டோ-ஜியோவில் உயர்மட்டக் குழுவில், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி, அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன கல்வியாளர்கள் சங்கம் ஆகியவை இணைக்கப்பட்டன. தற்செயல் விடுப்பு எடுத்து நாங்கள் நடத்திய போராட்ட நாளில் சம்பளம் பிடித்தம் செய்ய முடியாது. ஆனால் சில மாவட்டங்களில் அலுவலர்கள்,அதிகாரிகள் சம்பளம் பிடித்தம் செய்து வருகின்றனர். அது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும். ஜாக்டோ-ஜியோ சார்பில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நவம்பர் 27ம் தேதி தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் திட்டமிட்டபடி நடக்கும்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி