புதுடெல்லி: மல்லையாவிடம் இருந்து கடனை வசூலிக்க அவரது கம்பெனி பங்குகளை விற்க கடன் வசூல் தீர்ப்பாயம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆனால், இதை வாங்க வருமான வரித்துறை (ஐடி) முட்டுக்கட்டை போட்டுள்ளது. கிங்பிஷர் அதிபர் விஜய் மல்லையா, பாரத ஸ்டேட் வங்கி உட்பட பல்வேறு வங்கிகளில் வாங்கிய கடன் 9,000 கோடிக்கு மேல் நிலுவையில் உள்ளது. இதுதவிர, வரி உட்பட அமலாக்கத்துறை, வருமான வரித்துக்கும் ஏராளமான பாக்கி உள்ளது. மல்லையாவிடம் கடன்களை வசூலிக்க கடன் வசூல் தீர்ப்பாயம் கடந்த மாதம் 29ம் தேதி ஒரு உத்தரவு பிறப்பித்தது.
இதில் மல்லையாவின் யுனைடெட் ரேசிங் அண்ட் பிளட்ஸ்டாக் ப்ரீடர்ஸ் நிறுவனத்தின் 41,52,272 பங்குகளை விற்க ஆன்லைன் ஏலம் வரும் 30ம் தேதி நடக்கும் எனவும், இதில் ஒரு பங்கின் ஆரம்ப விலை 59.07 எனவும் அறிவித்துள்ளது. 31ம் தேதி நேரடி ஏலம் நடக்கிறது. ஆனால், வருமான வரித்துறையும் இந்த கம்பெனி பங்குகள் மூலம் தங்களது பாக்கியை வசூலிக்க உள்ளது. இந்நிலையில் வருமான வரித்துறை திடீர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில், மல்லையாவின் கம்பெனி பங்குகளை யாரும் வாங்கக்கூடாது. வாங்கினாலும் செல்லாது என தெரிவித்துள்ளது. இதனால் கடன் வசூலிக்க தீர்ப்பாய உத்தரவுக்கு வருமான வரித்துறை முட்டுக்கட்டை போட்டதுபோல் ஆகிவிட்டது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி